முன்னாள் டிஜிபி நடராஜ் நீக்கத்துக்கு இதுதான் காரணமா? படத்தை மாத்தி போட்டதா டிவி சேனல்?
சென்னை: தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்று தவறுதலாக முன்னாள் டிஜிபி நடராஜின் புகைப்படத்தை வெளியிட்டதால் அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்படும் நிலைக்கு ஆளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கருத்து தெரிவித்த வேறு நபருக்குப் பதிலாக தனது புகைப்படம் தவறுதலாக இடம் பெற்றதாகவும், தான் அதிமுகவுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படவில்லை என்றும் முன்னாள் டிஜிபி ஆர்.நடராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
முன்னாள் டிஜிபியாக இருந்தவர் ஆர்.நடராஜ். இவர் சென்னை மாநகர போலீஸ் கமிஷனராகவும் செயல்பட்டார். சந்தனக் கடத்தல் வீரப்பனை பிடிக்க அமைக்கப்பட்ட அதிரடிப்படையிலும் இவர் பணியாற்றினார். இதனை தொடர்ந்து அவர் மீண்டும் சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக பணியில் அமர்த்தப்பட்டார். இதனை தொடர்ந்து அரசு பணியில் இருந்த ஓய்வு பெற்ற அவர் அதிமுகவில் இணைந்தார்.
இதனையடுத்து அவருக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தலைவர்( டிஎன்பிஎஸ்சி) தலைவர் பதவி வழங்கப்பட்டது. இவர் அதிமுகவில் இணைந்திருந்தாலும் எந்த கட்சி பணிகளிலும் நேரடியாக ஈடுபட்டது கிடையாது. இந்நிலையில், ஆர்.நடராஜை கட்சி பதவி உள்பட அனைத்து பொறுப்பில் இருந்தும் நேற்று ஜெயலலிதா நீக்கி உத்தரவிட்டார்.
செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் சரியான நேரத்தில் திறந்து விடாததால் சென்னை நகரத்திற்கு பேரழிவு ஏற்பட்டது என்றும், சம்மபந்தபட்ட அதிகாரிகள் சரியான நேரத்தில் முதலமைச்சருடன் தொடர்புகொள்ள முடிந்திருந்தால், இந்த அழிவை தடுத்திருக்கலாம் என்றும், அரசியல் விமர்சகர் நடராஜ் என்பவர் கூறியதை செய்தி தொலைக்காட்சி ஒன்று சனிக்கிழமை வெளியிட்டது.
புகைப்படத்தை மாற்றிய சேனல்
ஆனால் கருத்தை தெரிவித்த நடராஜ் புகைப்படத்திற்கு பதிலாக முன்னாள் டிஜிபி ஆர்.நடராஜ் புகைப்படத்தை அந்த தொலைக்காட்சி தவறுதலாக வெளியிட்டது. இந்நிலையில், இன்று காலை முன்னாள் டிஜிபி நடராஜை கட்சியில் இருந்து நீக்கியதாக அதிமுக தலைமை அறிவித்தது. கட்சியின் கொள்கை - குறிக்கோள்களுக்கும் ,கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால் அவரை நீக்கியதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
முக்கிய காரணம் என்ன?
இந்த நிலையில் ஜெயலலிதா அதிமுகவில் இருந்து தமிழக காவல்துறை முன்னாள் இயக்குநர் ஆ.நடராஜை அதிரடியாக நீக்க முக்கிய காரணம் தனியார் தொலைக்காட்சியே என்று அந்த தொலைக்காட்சியின் பெயருடன் சமூக ஊடகங்களில் வைரலாக தகவல் பரவிவருகிறது.
நடராஜன் குற்றச்சாட்டு
டிவி நிகழ்ச்சியில் தொலைபேசி மூலம் தமிழக அரசை விமர்சித்து பேசினார் மூத்த பத்திரிகையாளர் ஆர்.நடராஜன். இங்கே அதிகாரம் பரவலாக்கபடவில்லை. எல்லா அதிகாரமும் முதல்வர் கையில் உள்ளது. அவர் கண்ணசைவுக்கு அதிகாரிகள் காத்திருந்ததே இந்த பெரும் சேதத்துக்கு காரணமாக அமைந்து விட்டது என்று அவர் குற்றம் சாட்டினார்.
சராமரி புகார்
கீழ்மட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடத்தான் தலைமை செயலர் இருக்கிறார். ஆனால் புதிதாக அவருக்கு ஆலோசனை வழங்க ஒருவர் வந்து, அவர் எல்லா தேவைக்கும் முதல்வர் உத்தரவிற்கு காத்திருந்தது இந்த பெரும் சேதத்துக்கு காரணம். முன்பெல்லாம் அணையை பொதுப் பணித்துறை அதிகாரிகள் திறந்து விடுவார்கள்.
சேதத்திற்கு காரணம்
இப்பொழுது "மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சித் தலைவி அம்மாவின் ஆணைக்கினங்க"ன்னு யார் யாரோ திறங்குறாங்க. அவர்களுக்காக காத்திருந்ததும் இந்த பெரும் சேதத்துக்கு காரணம். மொத்தத்தில் அரசு நிர்வாகம் சரியாக செயல்படாததே இந்த பெரும் சேதத்துக்கு காரணம்.
ஜெயலலிதா நடவடிக்கை
அந்த டிவி போன்ற நம்பகத் தன்மை வாய்ந்த நிறுவனம் மேற்கொள்ளும் செய்தி என்பதற்கு மதிப்பு கொடுத்து , அந்தத் தகவல் உண்மைக்குப் புறம்பானது என்பதை ஊர்ஜிதம் செய்யும் வகையில் திரு. நடராஜ் அவர்கள் மீது அ தி மு க தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. அதே நேரத்தில் அது முன்னாள் டிஜிபி நடராஜ் குரல் இல்லை என்று தெரியவரவே கமுக்கமாக ஒரு மன்னிப்புக் கடிதம் ஒன்று டிவி நிறுவனம் சார்பில் நட்ராஜுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாம்.
முன்னாள் டிஜிபி நடராஜ் விளக்கம்
தான் கட்சிக்கு எந்தவிதமான களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதில்லை என்றும், கட்சித்தலைமையிடம் இதைப்பற்றி விளக்குவேன் என்றும் கூறினார். செய்தி தொலைக்காட்சியின் புகைப்பட குளறுபடியால் நடந்த துரதிஷ்டவசமான நிகழ்வு முன்னாள் டிஜிபிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருப்பதாக பரவலாக பேசப்படுகிறது.
டிவி நிர்வாகம் வருத்தம்
இதனிடையே புகைப்படம் மாறியது தொடர்பாக டிவி நிர்வாகத்தின் தரப்பில் அளித்துள்ள விளக்கத்தில்,செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு தொடர்பாக முன்னாள் டிஜிபி நடராஜ் அவர்களிடம்தான் தொடர்பு கொள்ள முயற்சி செய்தோம். ஆனால் தவறுதலாக ஆர். நடராஜனுக்கு போன் போய்விட்டது. அதேநேரத்தில் நாங்கள் தயாராக வைத்திருந்த டிஜிபி நடராஜன் புகைப்படத்தை ஒளிபரப்பிவிட்டனர்.
நிர்வாகம் குளறுபடி
செய்தியின் ஒளிபரப்பின் போது புகைப்படம் ஒருவருடையதாகவும், குரல் வேறொருவடையதாகவும் மாறி ஒளிபரப்பானதற்கு எங்களுடைய நிர்வாகத்தில் ஏற்பட்ட குளறுபடியே காரணம். செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு பற்றிய செய்தி பரபரப்பில் தவறுதலாக ஒளிபரப்பிவிட்டோம் என்றும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.