மதுரை ஹைகோர்ட் கிளையை மூடிவிடலாமா? ஹைகோர்ட் நீதிபதிகள் கேள்வியால் வக்கீல்கள் அதிர்ச்சி
சென்னை: கட்டாய ஹெல்மெட் உத்தரவை எதிர்த்து போராடிய வக்கீல்கள் மீது மெட்ராஸ் ஹைகோர்ட் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை கூடுதல் பெஞ்ச் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று ஹைகோர்ட் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மதுரையில் வக்கீல்கள் போராட்டம் நடத்தினர். ஹெல்மெட்டுகளை ரோட்டில் போட்டு உடைத்தும் போராடினர்.
இதை ஊடகங்கள் வாயிலாக அறிந்த மெட்ராஸ் ஹைகோர்ட் தானாக முன்வந்து, வழக்கறிஞர்கள் மீது வழக்கு தாக்கல் செய்து விசாரணையை தொடங்கியுள்ளது.
இதுதொடர்பாக, மதுரை வழக்கறிஞர் சங்க தலைவர் தர்மராஜா, செயலாளர் ராமசாமி ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி ஹைகோர்ட் உத்தரவிட்டது. அவர் இன்று கோர்ட்டில் ஆஜராகினர்.
வழக்கு விசாரணையை, நீதிபதிகள், தமிழ்வாணன் மற்றும் சி.டி.செல்வம் ஆகியோர் நடத்தினர். வழக்கறிஞர் சண்முக வேலாயுதம் அரசு தரப்பில் ஆஜரானார். பால்கனகராஜ், வழக்கறிஞர்கள் சார்பில் ஆஜரானார்.
இந்த வழக்கு விசாரணையை கோர்ட் வளாகத்தில் ஆங்காங்கு டிவிகளை பொருத்தி நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விசாரணையின்போது, வக்கீல்கள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டால், கோர்ட் அவமதிப்பு வழக்கில் இருந்து அவர்களை விடுவிக்க பரிசீலிக்கப்படும் என்று நீதிபதிகள் கூறினர்.
மேலும், வழக்கறிஞர்களின் ஹெல்மெட்டுக்கு எதிரான போராட்டங்கள் குறித்து அதிக நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும். அதேபோல், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையை சிறிது காலத்திற்கு மூடி வைக்கலாம் என்றனர்.
நீதிபதிகள் சற்று கோபமாகவே இதை கூறியதால் வழக்கறிஞர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
தனிப்பட்ட முறையில் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தான் நடக்கவில்லை என்றும், தலைவர் மற்றும் செயலாளர் என்ற முறையில், ஹெல்மெட் உத்தரவுக்கு எதிரான வக்கீல் சங்க தீர்மானத்தில் கையெழுத்திட்டதாகவும், குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில், விளக்கம் கூறப்பட்டது.
இந்நிலையில், வழக்கு விசாரணையை கூடுதல் நீதிபதிகள் பெஞ்ச் விசாரிக்கட்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு மறுதேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்தி வைத்தனர். கூடுதல் நீதிபதி பெஞ்சில் எந்தெந்த நீதிபதிகள் அமர்வது என்பது பற்றி, மெட்ராஸ் ஹைகோர்ட் தலைமை நீதிபதி விரைவில் முடிவெடுக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.