தமிழகத்தைப் பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் வேண்டாம்... - சீமான் ஆவேசம்
நெடுவாசல்: நெடுவாசல் என்ற சோலைவனத்தை பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சீமான் கோரியுள்ளார்.
நெடுவாசல் கிராமத்தினர் நடத்தும் போராட்டத்திற்கு நேரில் வந்து ஆதரவளித்த நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறுகையில், "சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தில் இருந்து மக்களை காப்பாற்றாமல் போனது இந்த தமிழக அரசு. எண்ணூர் கடலில் எண்ணெய் கொட்டியது. அதனை முறையாக எடுக்க முடியாமல் வாளியில் அள்ளிக் கொட்டியது அரசு.
நெடுவாசலில் ஒரு பிரச்சனை என்றால் இந்த அரசு எப்படி சமாளிக்கும். அந்த அச்சம் எங்களுக்கு இருக்கிறது.
நெடுவாசலில் ஹைட்ரோ கார்பனை எடுப்பதன் மூலம் சோலைவனமான இந்த பூமி பாலைவனமாக மாறிவிடும். அரபு நாடுகளில் எண்ணெய் எடுக்கிறார்கள் என்றால் அது ஏற்கனவே பாலைவனமாக இருக்கிறது. ஆனால் இங்கு அப்படி இல்லை. அதனால் அதனை நாங்கள் ஒருபோதும் ஆதரிக்க முடியாது. இதுதான் வளர்ச்சி என்றால் அப்படி ஒரு வளர்ச்சி எங்களுக்கு வேண்டாம்.
மக்களின் போராட்டத்திற்கும் உணர்விற்கும் மதிப்பளித்து உடனடியாக இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும். தமிழகம் முழுவதற்குமான பிரச்சனையாக இது உருவெடுத்துள்ளது. விவசாயத்தை அழித்துவிட்டு எண்ணெய்யை எடுத்து என்ன செய்யப் போகிறோம்,?" என்று கூறினார் சீமான்.
சீமான் வந்தபோது பல ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு நின்று அவரது பேச்சைக் கேட்டனர். சமீப நாட்களில் வேறு எந்த அரசியல் தலைவருக்கும் கூடாத கூட்டம் இது.