ஸ்கெட்ச் போட்டு மாறு வேடத்தில் தப்பி வந்தேன்.. மதுரை தெற்கு சரவணன் பரபர பேட்டி!
கூவத்தூரில் இருந்தால் சசிகலாவிடம் மாட்டிக்கொள்வோம் என அங்கிருந்து தப்பி வந்தேன் என மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. சரவணன் கூறினார்.
சென்னை: கூவத்தூர் ரிசார்ட்டில் இருந்து மாறு வேடத்தில் தப்பி வந்ததாக மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ, சரவணன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்கள் வலுக்கட்டாயமாக கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். எப்படியும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் எம்.எல்.ஏக்களிடம் தம்மை ஆதரிக்குமாறு சசிகலா கெஞ்சி வருகிறார். கடந்த இரண்டு நாள்களாக அங்கு சென்று எம்.எல்.ஏக்களிடம் ஆலோசனை நடத்திய சசிகலா இன்றும் கூவத்தூர் சென்று ஆதரவை திரட்டினார்.
இதையடுத்து தமிழக அரசியல் களம் நொடிக்கு நொடி பரபரப்படைந்து வருகிறது. சசிகலா அணி, ஓபிஎஸ் அணி மாறி மாறி குற்றச்சாட்டுகளை சுமத்தி வருவதால் அரசியல் களம் அனல் பறக்கின்றன.
இந்நிலையில் மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. சரவணன், மதுரை லோக்சபா எம்.பி. கோபாலாகிருஷ்ணன் ஆகியோர் இன்று முதல்வர் பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை அவரது கிரீன்வேஸ் இல்லத்தில் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித் சரவணன் எம்.எல்.ஏ செய்தியாளர்களிடம் ஏ.கூறுகையில், கூவத்தூரில் தங்கியிருந்தால் சசிகலாவிடம் மாட்டிக்கொள்வோம் என அஞ்சி ஸ்கெட்ச் போட்டு மாறுவேடத்தில் தப்பித்து இங்கு ஓடி வந்தேன். கூவத்தூரில் தங்கியுள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். நானும் பாதிக்கப்பட்டேன்.
தமிழக மக்கள் பன்னீர்செல்வம் தான் முதல்வராக வேண்டும் என விரும்புகின்றனர். எனவே மேலும் எம்.எல்.ஏ.க்கள் பன்னீர்செல்வத்தை தேடி வருவார்கள். சட்டசபையில் வாக்கெடுப்பு நடந்தால் பன்னீர்செல்வம் தான் வெற்றி பெறுவார் என்றார்.