சிவகாசி, குமாரபாளையம் தொகுதி பாமக வேட்பாளர்கள் மாற்றம்
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் மேலும் இரண்டு தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். சிவகாசி, குமாரபாளையம் தொகுதி வேட்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எதிர்வரும் 16.05.2016 திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 2 தொகுதிகளின் வேட்பாளர்கள் கீழ்க்கண்ட விவரப்படி பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி இராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் மாற்றப்படுகின்றனர்" எனத் தெரிவித்துள்ளார்.
குமாரபாளையம் சட்டசபை தொகுதியில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் செல்வராஜூக்கு பதிலாக மூர்த்தி போட்டியிடுவார் என்றும்,
சிவகாசி சட்டசபை தொகுதியில் சிவநாதபாபுவிற்கு பதிலாக திலகபாமா போட்டியிடுவார் என்றும் பாட்டாளி மக்கள் கட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாமக வேட்பாளர்கள் மூன்றாவது முறையாக மாற்றப்பட்டுள்ளனர். முன்னதாக உளுந்தூர்பேட்டை தொகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டதை ஒட்டி அந்த தொகுதி பாமக வேட்பாளர் மாற்றப்பட்டார். விஜயகாந்துக்கு எதிராக பாலு களமிறக்கப்பட்டார்.
நேற்று இரண்டாவது முறையாக மயிலாப்பூர், தளி, பாலக்கோடு, திருத்துறைப்பூண்டி ஆகிய 4 தொகுதிகளின் பா.ம.க. வேட்பாளர்கள் மாற்றபட்டனர். இன்று மூன்றாவது முறையாக குமாரபாளையம், சிவகாசி தொகுதி வேட்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாமக 6 கட்டமாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. கடைசியாக அறிவித்த வேட்பாளர் பட்டியலில்தான் சிவகாசி தொகுதி வேட்பாளராக சிவநாதபாபுவை அறிவித்தார் டாக்டர் ராமதாஸ். சட்டசபைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில் சிவநாதபாபுவை மாற்றிவிட்டு தற்போது சிவகாசி சட்டசபை தொகுதிக்கு திலகபாமாவை வேட்பாளராக அறிவித்துள்ளார் ராமதாஸ்.