எம்எல்.ஏ.க்கள் கடத்தல்: எடப்பாடி பழனிச்சாமியிடம் போலீசார் விசாரணை- எந்த நேரத்திலும் கைது?
எம்.எல்.ஏ.க்கள் கடத்தப்பட்ட வழக்கில் எடப்பாடி பழனிச்சாமியிடம் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து எந்த நேரத்திலும் எடப்பாடி பழனிச்சாமி கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
சென்னை: அதிமுக எம்.எல்.ஏக்களை கடத்திய வழக்கில் அதிமுக சட்டசபை குழு தலைவர் எடப்பாடி பழனிச்சாமியிடம் போலீஸ் ஐஜி செந்தாமரைக் கண்ணன் மற்றும் காஞ்சிபுரம் எஸ்.பி. முத்தரசி ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் எந்த நேரத்திலும் எடப்பாடி பழனிச்சாமி கைது செய்யப்படலாம் என தெரிகிறது.
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இடைக்கால முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துவிடக் கூடாது என்பதற்காக கூவத்தூர் ரிசார்ட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். சசிகலாவின் உத்தரவின் பேரில் மன்னார்குடி குண்டர்களின் கட்டுப்பாட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள் சிறை வைக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்த சிறையில் இருந்து மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. சரவணன் மாறுவேடத்தில் தப்பினார். அவர் நேரடியாக முதல்வர் ஓபிஎஸ் வீட்டுக்கு சென்று தமது ஆதரவை தெரிவித்தார். அத்துடன் தாம் கடத்தி வைக்கப்பட்டதாக காவல்துறை இயக்குநரிடம் எம்.எல்.ஏ. சரவணன் புகார் தெரிவித்திருந்தார்.
இப்புகாரின் அடிப்படையில் கூவத்தூர் போலீசார் சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சிலர் மீது ஆட்கடத்தல், கொலை மிரட்டல், சிறை வைத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது. சசிகலா பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைய சென்றுவிட்டார்.
இதனால் தற்போது கூவத்தூர் ரிசார்ட்டில் எடப்பாடி பழனிச்சாமியிடம் போலீஸ் ஐஜி செந்தாமரைக் கண்ணன் மற்றும் காஞ்சிபுரம் எஸ்பி முத்தரசி ஆகியோர் துருவித் துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி கைது செய்யப்படவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.