பொன். ராதாகிருஷ்ணனின் திடீர் 'ராஜினாமா பேச்சுக்கு' காரணம் என்ன தெரியுமா?
சென்னை: குளச்சல் திட்டத்துக்கு இடையூறு ஏற்பட்டால் தாம் பதவியை ராஜினாமா செய்வேன் என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறிவருவது பற்றி நமட்டு புன்னகையை வெளிப்படுத்துகின்றனர் பாஜக நிர்வாகிகள்.
நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பொன். ராதாகிருஷ்ணன், குளச்சல் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அமைச்சர் பதவியை இழக்கவும் தயார் என கூறியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக பாஜக வட்டாரங்களில் விசாரித்த போது, பிரதமர் மோடியால் அமைச்சரவையில் இருந்து கழற்றிவிடப்படுகிற நிலையில் இருக்கிறோம் என்பதை உணர்ந்துதான் அவர் அப்படி பேசியிருக்கிறாராம்.
தமிழக பாஜக தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் இருந்தபோதும் பொன்னார் தனி ஆவர்த்தனம் நடத்தி வருவது குறித்து தொடர்ச்சியாக புகார்கள் மேலிடத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறதாம். அண்மையில் ஒருபொதுக்கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் பெயரைக் கூட பொன். ராதாகிருஷ்ணன் உச்சரிக்கவில்லை என்பது சர்ச்சையானது.
சட்டசபை தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒன்றிரண்டு தொகுதிகளையாவது பாஜக கைப்பற்றும் என்றே டெல்லி மேலிடம் பெரிதும் எதிர்பார்த்ததாம். ஆனால் பாஜகவினருடன் நெருக்கமாக இல்லாமல் பொன். ராதாகிருஷ்ணன் தனித்து செயல்படப் போய் தோல்வியைத்தான் தழுவ நேரிட்டது; அவர் மட்டும் பாஜகவினருடன் நெருக்கமாக இருந்து தேர்தல் பணியாற்றி இருந்தால் குறைந்தது 3 தொகுதிகளிலாவது வென்றிருக்க முடியும் என்பது தமிழக பாஜக தலைவர்களின் கருத்து.
இதை அப்படியே டெல்லி மேலிடத்துக்கும் தெரியப்படுத்தியிருக்கிறார்கள். அண்மையில் நாகர்கோவிலுக்கு பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா வந்தபோது கூட்டமே இல்லை என கடிந்து கொண்டாராம்... ஆனால் பொன். ராதாகிருஷ்ணனோ இதைப்பற்றி எந்த கவலையுமே படவில்லையாம். இப்படி தனி கச்சேரி நடத்தி வருவதால் அடுத்த அமைச்சரவை மாற்றத்தின் போது அவரை கழற்றிவிட பிரதமர் மோடியும் பாஜகவும் முடிவு செய்திருக்கிறது என்கின்றன டெல்லி தகவல்கள்.
இதனை உணர்ந்துதான் குளச்சல் துறைமுகம் திட்டத்தை முன்வைத்து தாம் ராஜினாமா செய்யப் போகிறேன் என மறைமுகமாக கட்சி மேலிடத்துக்கு மிரட்டல் விடுத்து வருகிறாராம் பொன். ராதாகிருஷ்ணன்.
நடக்கட்டும்! நடக்கட்டும்!!