அதிமுக அணிகளிடையே கட்ட பஞ்சாயத்து செய்கிறார் மோடி… மு.க. ஸ்டாலின் கடும் தாக்கு
பிரிந்துள்ள இரண்டு அதிமுக அணிகளுக்கிடையில் கட்டப் பஞ்சாயத்து செய்கிறார் பிரதமர் மோடி என்று மு.க. ஸ்டாலின் கடுமையாக தாக்கியுள்ளார்.
சென்னை: பள்ளிக்கரணை அருகே ஜல்லடையான்பேட்டையில் குளத்தை தூர்வாரும் பணியை மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
சென்னை பள்ளிக்கரணை மற்றும் சோழிங்கநல்லூர் பகுதிகளில் உள்ள குளங்கள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதனை ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் திமுக சார்பில் நீர்நிலைகளை தூர்வாரும் பணி நடந்து வருகிறது என்று தெரிவித்தார். இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.
காழ்ப்புணர்ச்சி
மக்கள் நலனுக்காகவே திமுக இதனை செய்து வருவதாகவும், இந்தப் பணியை அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் சிலர் விமர்சிக்கின்றனர் என்று ஸ்டாலின் குற்றம்சாட்டினார். திமுகவிற்கு புகழ் வந்துவிடும் என்ற நோக்கில் பிற கட்சிகள் விமர்சிக்கின்றன.
மக்கள் நலன்
மேலும், தமிழகத்தில் நிலவி வரும் குடிநீர் பிரச்சனையை தீர்க்கவே திமுக சார்பில் குளங்கள் தூர்வாரப்பட்டு வருகின்றன. அதனால் விமர்சனங்களை கண்டு கொள்ளாமல் திமுக தொண்டர்கள் தூர்வாரும் பணிகளை ஆற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
கட்டப்பஞ்சாயத்து
பிரிந்து கிடக்கும் அதிமுக அணிகளுக்கிடையில் எழுந்துள்ள பிரச்சனைகளில் பிரதமர் மோடி கட்டப்பஞ்சாயத்து செய்து வருகிறார். முதல்வர் பழனிச்சாமி டெல்லி சென்று பிரமரை சந்தித்து பேசியது அரசியல் ரீதியானது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
கேள்வி
மணல் மாஃபியா சேகர் ரெட்டி நண்பர் ஓபிஎஸ்ஸை சந்தித்து பேசுகிறார். ஆனால் விவசாயிகளை பிரதமர் சந்திக்கக் கூடாதா என்று மீண்டும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.