கி.வீரமணி மூத்த தலைவர்... அவரை விமர்சிக்க விரும்பவில்லை - ஸ்டாலின்
கி.வீரமணி மூத்த தலைவர், அவர் மீது மதிப்பும் மரியாதையும் உள்ளது அவரை விமர்சிக்க விரும்பவில்லை என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த போது சட்டசபையில் நடந்த சம்பவங்களை மு.க.ஸ்டாலின் இன்று அண்ணா அறிவாலயத்தில் விளக்கம் அளித்தார். அப்போது செய்தியாளர்கள் கி. வீரமணியின் அறிக்கை பற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு ஸ்டாலின், வி.வீரமணி வயது மூத்த தலைவர் என்று அவர் கூறினார்.
சட்டசபையில் நடந்த சம்பவம் பற்றி அறிக்கை வெளியிட்டிருந்த வீரமணி, சட்டசபையில் நடந்த அமளிகள் வரலாற்றில் தீராத கறையை ஏற்படுத்தி விட்டன. எந்த அணிக்கும் ஆதரவில்லை என்று தொடக்கத்தில் கூறப்பட்ட நிலையோடு திமுக நின்றிருந்தால் இவ்வளவு மனவேதனையும், வெட்கப்படத்தக்க, திமுகவின் அரசியல் வரலாற்றில் களங்கம் ஏற்படும் நிலையும் ஏற்பட்டிருக்காத என்று கூறியிருந்தார்.
பேரவைத்தலைவர் நாற்காலியில் அமர்வது, இருக்கையை உடைப்பது, அண்ணாவின் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுக்கு முற்றிலும் உரியதாக இல்லை. வெட்கமும், வேதனையும்பட வேண்டிய தலைகுனிவான நிலையும் கூட. இந்தக் கட்டத்தில் கருணாநிதி சபையில் இருந்து வழி நடத்த இல்லாததால் ஏற்பட்ட நிலைமை இது என்று வீரமணி தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
இது பற்றி இன்று அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், தான் கி.வீரமணியிடம் மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பதாக கூறினார். கி.வீரமணி வயது மூத்த தலைவர் என்றும் அவரை தான் விமர்சிக்க விரும்பவில்லை என்றும் ஸ்டாலின் கூறினார்.