ஹார்முஸ் முடக்கம்: மோடி எடுத்த திடீர் முடிவு! பெட்ரோலை தொடர்ந்து விமான எரிபொருளில் எத்தனால் கலப்பு
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு விமான எரிபொருளான ஏடிஎஃப் (Aviation Turbine Fuel) எனப்படும் ஏவியேஷன் டர்பைன் எரிபொருளில் எத்தனால் மற்றும் பிற செயற்கை அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட ஹைட்ரோகார்பன்களை கலக்க அனுமதி அளித்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் வரையில் எத்தனால் கலந்ததை தொடர்ந்து தற்போது விமான எரிபொருளில் எத்தனால் கலக்கப்படுகிறது. ஆனால் பெட்ரோலுக்கு விதிக்கப்பட்ட 20 சதவீத டார்கெட் போன்று விமான எரிபொருளுக்கு எவ்விதமான இலக்குகளையும் நிர்ணயிக்கவில்லை என்று அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு இத்தகைய முடிவை எடுக்க முக்கிய காரணம், எரிபொருள் இறக்குமதியை குறைத்து, விமானப் போக்குவரத்தில் ஏற்படும் மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளது.

புதிய திருத்தம் என்ன?
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் 1955-ம் ஆண்டு அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ், 2001-ம் ஆண்டு வெளியிடப்பட்ட விமான டர்பைன் எரிபொருள் (விற்பனை ஒழுங்குமுறை) உத்தரவில் திருத்தம் செய்துள்ளது. இந்த திருத்தத்தின் மூலம் ஏடிஎஃப்-ன் வரையறை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இப்போது ஏடிஎஃப் என்பது ஐஎஸ் 1571 தரநிலைக்கு உட்பட்ட ஹைட்ரோகார்பன்கள் கலவை அல்லது ஐஎஸ் 17081 தரநிலைக்கு உட்பட்ட செயற்கை ஹைட்ரோகார்பன்களுடன் கலந்த கலவையாக வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் மூலம் புதிய வகை எரிபொருட்களை சேர்க்கும் வாய்ப்பை உருவாக்குகிறது.
எதற்காக இந்த மாற்றம்?
தற்போது ஏடிஎஃப் பெரும்பாலும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பின் வாயிலாக உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியா அதிக அளவில் எண்ணெயை இறக்குமதி நாடாக இருக்கும் காரணத்தால், இறக்குமதி செலவை குறைக்கும் முயற்சியாக இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டு உள்ளது. எனவே செயற்கை ஹைட்ரோகார்பன்கள் அல்லது எத்தனால் கலந்து பயன்படுத்தினால் இறக்குமதி சார்பு குறையும். அதே நேரத்தில் விமானங்கள் வெளியிடும் கார்பன் உமிழ்வும் குறையும்.
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இந்தியாவில் 100 சதவீதம் எத்தனால் மூலம் இயங்கும் வாகனங்களை உருவாக்க வேண்டும், இறக்குமதி சார்பை தொடர்ந்து குறைக்க வேண்டும் என தெரிவித்தார்.
உலக அளவில் பல நாடுகள் இதே திசையில் நகர்கின்றன. உதாரணமாக இங்கிலாந்து மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் ஏற்கனவே நிலையான விமான எரிபொருள் (SAF - sustainable aviation fuel) எனப்படும் செயற்கை எரிபொருளை கட்டாயமாக கலக்கும் விதிமுறைகளை அமல்படுத்தி வருகின்றன. இந்த SAF வீட்டு கழிவு எண்ணெய், கொழுப்பு, சர்க்கரை, தானியங்கள், நகரக் குப்பை, மரம், விவசாயக் கழிவுகள் அல்லது கார்பன் டைஆக்சைட் ஆகியவற்றிலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்தியாவின் டார்கெட் என்ன?
இந்தியா சர்வதேச விமானங்களில் பயன்படுத்தப்படும் எரிபொருளில் 2027-ம் ஆண்டுக்குள் 1 சதவீதம் SAF-ஐ கலக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. 2028-ல் இது 2 சதவீதமாகவும், 2030-ல் 5 சதவீதமாகவும் உயர்த்தப்பட உள்ளது. இது உலகளாவிய CORSIA (Carbon Offsetting and Reduction Scheme for International Aviation) விதிமுறைக்கு ஏற்ப உள்ளது. ஆனால் உள்நாட்டு விமானங்களில் பயன்படுத்தப்படும் எரிபொருளுக்கு இன்னும் எந்த இலக்கும் நிர்ணயிக்கப்படவில்லை.
இந்த அறிவிப்பு இந்தியாவின் விமானத் துறையில் பசுமை எரிபொருள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் முதல் படியாகப் பார்க்கப்படுகிறது. இது விமானப் போக்குவரத்தின் செலவை குறைக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications