100% எத்தனால்.. பெட்ரோலுக்கு முழுக்கு போட நிதின் கட்கரி திட்டம்.. இதுதான் இந்தியாவின் எதிர்காலமாம்!
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் கட்கரி, இந்தியா விரைவில் 100 சதவீத எத்தனால் கலவையை (ethanol blending) அடைய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக எண்ணெய் இறக்குமதியில் ஏற்பட்டுள்ள சிக்கல், இந்தியா, எரிசக்தியில் சுயசார்பு நிலைக்கு வர வேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ளது என்று நிதின் கட்கரி தெரிவித்தார்.
இந்தியாவில் தற்போது 20 சதவீத எத்தனால் கலப்பு பெட்ரோல் மக்கள் பயன்படுத்த துவங்கியிருக்கும் காரணத்தால் அரசு அதிகப்படியான நிதியை சேமித்துள்ளது. இதேவேளையில் இந்தியாவில் அதிகப்படியான எத்தனால் உற்பத்தி திறன் இருக்கும் நிலையில் எரிபொருள் பயன்பாட்டில் சுயசார்பு நிலையை எட்ட எத்தனால் பாலமாக இருந்து வருகிறது.

எரிசக்தி சுயசார்பு அவசியம்
இந்திய பசுமை ஆற்றல் கூட்டமைப்பின் பசுமைப் போக்குவரத்து மாநாட்டில் பேசிய நிதின் கட்கரி "இன்று மத்திய கிழக்கு போர் காரணமாக நாம் எரிசக்தி நெருக்கடியை எதிர்கொள்கிறோம். எனவே எரிசக்தி துறையில் சுயசார்பை விரைவில் அடைய வேண்டும்" என்று கட்கரி கூறினார்.
தற்போது இந்தியா தனது எண்ணெய் தேவையில் 87 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது. இதற்காக ஆண்டுக்கு ரூ.22 லட்சம் கோடி செலவிடப்படுகிறது. இந்த இறக்குமதி மட்டுமல்ல, அது சுற்றுச்சூழல் மாசையும் அதிகரிக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
CAFE III தரநிலைகள்
அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் Corporate Average Fuel Efficiency III (CAFE III) தரநிலைகள் மூலம் எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் ஃப்ளெக்ஸ்-ஃப்யூயல் வாகனங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
எரிபொருள் மாற்றம்
தற்போது E20 பெட்ரோலை இந்திய வாகனங்கள் சிறிய மாற்றங்களுடன் பயன்படுத்த முடிகிறது. ஆனால் பிரேசில் போன்ற நாடுகள் ஏற்கனவே 100 சதவீத எத்தனால் கலவை அடிப்படையிலான எரிபொருளை பயன்படுத்தும் நிலைக்கு அடைந்துள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
கிரீன் ஹைட்ரஜன் எதிர்கால எரிபொருள்
கிரீன் ஹைட்ரஜன் தான் இந்தியாவின் எதிர்கால எரிபொருளாக இருக்கும் என்று கட்கரி வலியுறுத்தினார். எப்படி எலக்ட்ரிக் வாகன துறை பெரிய அளவிலான மாற்றத்தை உருவாக்கியதோ அதேபோன்க மாற்றத்தை ஹைட்ரஜன் எரிபொருள் ஏற்படுத்தும். ஆனால் ஹைட்ரஜன் எரிபொருள் நிலையத்தின் இயக்கச் செலவை குறைக்க வேண்டும் என்றும், 1 கிலோ ஹைட்ரஜனை 1 டாலர் விலையில் உற்பத்தி செய்தால் இந்தியா எரிசக்தி ஏற்றுமதி நாடாக மாறும் என்றும் அவர் கூறினார்.
இதேபோல் கழிவுகளிலிருந்து ஹைட்ரஜன் உற்பத்தி செய்ய வேண்டும் என்றும், இந்தியாவில் வட்டப் பொருளாதாரத்தை அதாவது circular economy ஊக்குவிப்பதன் மூலம் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்றும் இக்கூட்டத்தில் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
பெட்ரோலில் எத்தனால் கலவை அதிகரிப்பது மற்றும் கிரீன் ஹைட்ரஜன் போன்ற மாற்று எரிபொருட்களை ஊக்குவிப்பது, இந்தியாவின் எரிசக்தி இறக்குமதியை குறைத்து, செலவை குறைக்க உதவும். இது சுற்றுச்சூழல் மாசுப்பாட்டையும் குறைக்கும்.
அனைத்தையும் விட முக்கியமாக இந்தியாவில் வளைகுடா, ரஷ்யா, அமெரிக்கா என எந்த நாடும் இந்தியாவுக்கான எரிபொருள் சப்ளையை நிறுத்தினாலும் சுயசார்புடன் இருக்கும் போது எவ்விதமான நெருக்கடியும் இல்லாமல் இந்தியா தொடர்ந்து வளர்ச்சி அடைய வேண்டும்.
இதேபோல் எத்தனால் கலப்பு மூலம் வரும் வாகன இயக்க பாதிப்புகளை சரி செய்ய மத்திய அரசும் ஆட்டோமொபைல் நிறுவனங்களும் கொள்கை அளவிலான மாற்றங்களை கொண்டு வர வேண்டும்.












Click it and Unblock the Notifications