விஜய்கிட்ட பேசுறீங்களா! வீட்டிலுள்ள சுட்டிகளுக்கு வீடியோ கால் செய்த தலைவர்கள்! ராஜ்பவனில் சுவாரசியம்
சென்னை: பெரும்பான்மை கிடைத்த நிலையில் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு விஜய், கூட்டணி மற்றும் ஆதரவு தெரிவித்த கட்சியினருடன் ஆளுநர் மாளிகைக்கு சென்றார். அப்போது சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக அங்கு இருந்தார். காத்திருந்த நேரத்தில், கூட்டணி கட்சி தலைவர்களின் சுட்டீஸ் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களிடம் விஜய் வீடியோ காலில் பேசினாராம்.
அதே போல, ஆளுநர் மாளிகையில் இருந்து சுடச்சுட காஃபி, அல்வா, ஸ்னாக்ஸ் உள்ளிட்டவையும் பரிமாறப்பட்டுள்ளது. பரபரப்பான தருணத்திலும் ஆளுநர் மாளிகையில் இதுபோன்ற சுவாரசிய நிகழ்வுகளும் அரங்கேறியுள்ளன.

ஆளுநரை சந்தித்த விஜய்
தமிழக சட்டசபை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வென்ற தவெகவிற்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காமல் கடந்த 4 நாட்களாக ஆளுநர் அர்லேகர் போக்கு காட்டி வந்தார். விஜய் மெஜாரிட்டி எண்ணோடு வந்தால் மட்டுமே அழைப்பு விடுக்கப்படும் என்று ஆளுநர் அர்லேகர் திட்டவட்டமாக கூறிய நிலையில், நேற்று தனக்கு மெஜாரிட்டியை உறுதி செய்த விஜய், ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர சென்றார்.
கடந்த மூன்று முறையும் ஆளுநர் அழைப்பு விடுக்காத நிலையில், இந்த முறை கூட்டணி, ஆதரவு தெரிவித்த கட்சி தலைவர்களையும் விஜய் உடன் அழைத்து சென்றார். காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை, கம்யூனிஸ்ட் தலைவர்களும் ஆளுநரை சந்திக்க சென்றனர். விஜய் தனக்கு பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையை தாண்டி ஆதரவு இருப்பதால் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என்று கோரியிருக்கிறார்.
சுடச்சுட காபி, ஸ்னாக்ஸ், வடை..
விஜய் அளித்த கடிதங்களை ஆய்வு செய்த ஆளுநர் ஆட்சி அமைக்க 1 மணி நேரத்தில் அழைப்பு விடுக்கிறேன்.. நீங்கள் போய் வாருங்கள் என்று கூறினாராம்.. ஆனால் விஜய்யோ நான் காத்திருந்து கையோடு அழைப்பு கடிதத்தை வாங்கி செல்கிறேன் என்று கூறி அங்கேயே காத்திருந்துள்ளார். இதனால் ஆளுநர் மாளிகையில் கூட்டணி தலைவர்களுடன் விஜய் காத்திருந்துள்ளார்.
அப்போது ஆளுநர் மாளிகையில் இருந்து விஜய் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுக்கு சுடச்சுட காபி, ஸ்னாக்ஸ், வடை, ஹல்வா ஆகியவை பரிமாறப்பட்டுள்ளன. ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பாரா? அல்லது ஏதேனும் காரணத்தை சொல்லி இழுத்தடிப்பாரா" என்ற பரபரப்பு இருந்தாலும் தலைவர்கள் கூலாகவே இருந்துள்ளனர்.
வீடியோ காலில் பேசிய விஜய்
சுமார் ஒரு மணி நேரமாக அழைப்பு கடிதத்திற்காக விஜய் காத்திருந்த நிலையில், தலைவர்கள் ஒருவொருக்கொருவர் சகஜமாக பேசிக்கொண்டு இருந்து இருக்கிறார்கள். அந்த நேரத்தில், சில கூட்டணி கட்சி தலைவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் வீடியோ காலில் பேசியுள்ளனர். தொடர்ந்து விஜய் ரசிகர்களாக உள்ள பேரன் பேத்திகள் உள்ளிட்டோர் விஜய்யுடன் வீடியோ காலில் பேசியதாக சொல்லப்படுகிறது.
ஆளுநர் மாளிகையில் சுவாரசிய நிகழ்வு
ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு கடிதத்தை வாங்குவதற்காக காத்திருந்த அந்த பரபரப்பான நிமிடங்களில் கூட ஆளுநர் மாளிகையில் இப்படியான சுவாரசிய நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. தொடர்ந்து சிறிது நேரத்தில் ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு கடிதம் ரெடியானதும் விஜய்யை அழைத்து அதனை வழங்கியுள்ளார்.
அப்போது அமைச்சர்கள் பதவியேற்பு உள்ளிட்டவை பற்றியும் பேசப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதேபோல, நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பிற்பகல் 3 மணிக்கு பதவி ஏற்பு விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காலையில் பதவியேற்பு விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆளுநர் அர்லேகர் கேரளாவிற்கும் செல்ல வேண்டியிருப்பதால் இந்த மாற்றம் செய்யப்பட்டு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.














Click it and Unblock the Notifications