சென்னை: அமைச்சர்கள் லிஸ்ட்டையே திமுக தரப்பு தயார் செய்து வருகிறது என்ற தகவல்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், அதிமுக தலைமையின் தற்போதைய நிகழ்வுகள் குறித்தும் செய்திகள் கசிந்து வருகிறது.
தேர்தல் ரிசல்ட்டுக்காக தமிழகம் எதிர்நோக்கி வரும் நிலையில், திமுக தரப்பு ஜரூர் காரியங்களில் இறங்கி விட்டது.. அடுத்து நம்ம ஆட்சிதான் என்ற தெம்பில் பூரித்து போய் உள்ளனர்.. திமுக தலைமையோ, அதிகாரிகள், அமைச்சர்கள், தனி ஆலோசகர்கள் யார் யார் என்ற லிஸ்ட் எடுத்து வருகிறது.
இப்படி ஒரு தகவல், 10 நாளைக்கு முன்பே வந்தது.. தற்போதும் இது வலுவாகி கொண்டேதான் போகிறது.. அதேசமயம், அதிமுக தரப்பு ஒரு சத்தமும் இல்லாமல் கம்மென்று இருக்கிறது..
தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் வரை, உற்சாகமாக இருந்தவர்கள், வாக்குப்பதிவு அன்றே சுணங்கி விட்டதாக தெரிகிறது.. வாக்குப்பதிவுக்கு பிறகு டிரான்ஸ்பர் ஆன ஓட்டுக்களை வைத்தும், அதன் நாலாபுறத்தில் இருந்து ரிப்போர்ட்களை வைத்தும் கதிகலங்கி போயுள்ளதாகவும் தெரிகிறது. அமைச்சர்கள் ஒருத்தரும் ஒரு பேட்டியும் தராமலேயே இருக்கிறார்கள்.
ஆனால், எடப்பாடியார் மட்டும் மிகுந்த நம்பிக்கையில் இருக்கிறாராம்.. இப்போது மட்டும் இல்லை, பிரச்சாரத்தின்போதே எடப்பாடியாரிடம் காணப்பட்ட தன்னம்பிக்கையும், வீரியமும் அனைவராலும் கவனிக்கப்பட்ட ஒன்றாகும்.. தனித்தே பிரச்சாரத்துக்கு சென்றார்.. அனைத்து கட்சிகளுக்கும் முன்பாக, இவர்தான் பிரச்சாரத்தை கையில் எடுத்தார்.. தனி ஒருவராகவே தமிழகம் முழுக்க வலம் வந்து வாக்குகளை சேகரித்தார்.. ஓபிஎஸ்கூட ஓரிரு இடங்களுக்கு மட்டுமே சென்றார்.. ஆனால், எடப்பாடியார் பிரச்சாரம் செய்த அளவுக்கு, வேறு யாரும் அதிமுகவில் அப்படி தீவிரத்தை முன்னெடுக்கவில்லை என்பதே உண்மை.
வாக்குப்பதிவு அன்றைய தினமும் சரி, தேர்தலுக்கு பிறகும்சரி, இதே நம்பிக்கைதான் எடப்பாடியாரிடம் காணப்படுகிறதாம்.. எத்தனையோ அமைச்சர்கள், எத்தனையோ நிர்வாகிகள் முதல்வரை பலமுறை சந்தித்து ஆலோசனைகள் நடத்தியபோதும், நெகட்டிவ் ரிப்போர்ட்களை அவரிடம் பகிர்ந்துகொண்டபோதும், எடப்பாடியார் வார்த்தைகளை கொட்டிவிடவில்லை.. நம்பிக்கையை இழக்கவில்லை, மாறாக கட்சி நமக்கு ரொம்ப முக்கியம் என்று மட்டும் சொல்லி உள்ளார்.
ஆனால், அதிகாரிகள் தரப்பு திமுக தரப்பை சந்தித்து வாழ்த்து சொல்லி வருவதாகவும், நேரில் சந்திக்க முயற்சி செய்வதாகவும் செய்திகள் கசிந்து வருவதுதான், எடப்பாடியாருக்கு டென்ஷனை எகிற வைத்து வருகிறதாம்.. அதாவது போலீஸ் தரப்பு அதிகாரிகள் திமுகவுக்கும், தலைமை செயலக அதிகாரிகள் அதிமுகவுக்கும் சாதகமான மனநிலையில் இருப்பதாக தெரிகிறது.
இப்படிப்பட்ட சூழலில்தான், சமீபத்தில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் சிலர் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்களாம்.. அப்போது எடப்பாடியார், அவர்களிடம் ஒரு லிஸ்ட்டை எடுத்து காட்டினாராம்.. அது வாக்குப்பதிவுக்கு பிறகு, ஒவ்வொரு தொகுதியாக எடுக்கப்பட்ட ரிப்போர்ட் ஆகும்..
அதன்படி, 130 தொகுதிகள் அதிமுகவுக்கு சாதகமாக இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.. இதைதான் அந்த அதிகாரிகளிடம் காட்டிய எடப்பாடியார், இந்த 130 தொகுதியிலும் அதிமுகதான் ஜெயிக்க போகுது.. அடுத்த ஆட்சியும் நாமதான்.. இது தெரியாமல் சில அதிகாரிங்க ஸ்டாலின்கிட்ட பேசிக்கிட்டு இருக்காங்க... அதிமுக ஆட்சி அமையட்டும்... அவங்களை நான் பார்த்துக்கறேன் என்றாராம்.
அன்றைய தினம் எடப்பாடியாரை சந்தித்த அதிகாரிகளில், சிலர் நிஜமாகவே ஸ்டாலினுக்கு வாழ்த்து சொன்னவர்களும் அடக்கமாம்.. எனினும், அதிமுக தலைமை இப்போதும் இப்படி ஒரு நம்பிக்கையில் உள்ள நிலையில், திமுக தரப்போ, அமைச்சர்கள் லிஸ்ட்டை தீவிரமாக எடுத்து கொண்டிருக்கிறதாம்..!