லயோலா மணி சொன்னது உண்மையாகிரும் போலயே.. இணைகிறதா திமுக - அதிமுக?
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நிலவும் இழுபறி நிலைக்கு இடையே, ஒருவேளை திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் கைகோர்த்தால், தங்கள் கட்சியின் 107 எம்எல்ஏ-க்களும் ஒட்டுமொத்தமாக பதவியை ராஜினாமா செய்வார்கள் என்று தவெக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களில் வென்று தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கிறது. ஆனால் பெரும்பான்மை நிரூபிக்க இன்னும் 11 எம்எல்ஏக்கள் தேவைப்பட்ட சூழலில், காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆட்சி அமைக்க சேர்ந்திருக்கிறது. ஆனால் தவெகவுக்கு இன்னும் 6 எம்எல்ஏ-க்கள் தேவையாக இருக்கும் சூழலில், விசிக, சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகளின் ஆதரவை விஜய் நாடியுள்ளார்.

ஆனால் இந்த 3 கட்சிகளும் இதுவரை தங்களின் முடிவை அறிவிக்கவில்லை. இன்று திமுக தலைவர் ஸ்டாலினை இந்த 3 கட்சித் தலைவர்களும் சந்தித்தனர். இதையடுத்து அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏ-க்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளின் கூட்டம் நடைபெற்றது. அதேபோல் புதுச்சேரியில் அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்த இரு கூட்டங்களிலும் கட்சித் தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோல் இரு தரப்பிடமும் திமுக - அதிமுக ஆகிய கட்சிகளுக்கு இடையில் கூட்டணி அமைகிறதா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு இரு தரப்புமே மறுப்பு தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் திமுக - அதிமுக கூட்டணி என்ற பேச்சுகள் தீவிரம் அடைந்திருக்கிறது.
திமுக வெளியில் இருந்து அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாகவும், எடப்பாடி பழனிசாமி முதல்வராகவும் பொறுப்பேற்க உள்ளதாக பேச்சுகள் எழுந்துள்ளன. விசிக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளுக்கு கூட்டணியில் அமைச்சரவை கொடுக்கவும் பேச்சுவார்த்தை நடந்ததாக சொல்லப்படுகிறது. ஒருவேளை கூட்டணி ஆட்சி அமைந்தால், தவெக தரப்பில் மாற்று திட்டங்களை ஆலோசித்து வருகிறது.
அதுமட்டுமல்லாமல் திமுக மற்றும் அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரினால், தவெக எம்எல்ஏ-க்கள் 107 பேரும் கூண்டோடு ராஜினாமா செய்வோம் என்று விஜய் அக்கட்சியினர் மத்தியில் பேசி இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் தமிழக அரசியல் களத்தில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவி வருகிறது. நாளை என்ன மாதிரியான மாற்றங்கள் நிகழும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
தவெகவை விஜய் தொடங்கிய போது அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் லயோலா மணி, விஜய்யை எதிர்க்க திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் கூட்டணி அமைக்கும் என்று கூறி இருந்தார். அப்போது அது கிண்டலுக்கு உள்ளானது. ஆனால் தற்போதைய அரசியல் சூழலில், லயோலா மணி சொல்வது உண்மையாக வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications