திமுக, அதிமுக கூட்டணி சேர்ந்தால் 108 எம்எல்ஏக்களும் ராஜினாமா.. தவெக பகீர் திட்டம்!
சென்னை: திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சியமைக்கலாம் என்ற தகவல் தீயாகப் பரவி வருகிறது. இந்நிலையில், திமுக அல்லது அதிமுக ஆட்சியமைக்க கவர்னரிடம் உரிமை கோரினால், தவெகவின் 108 எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
பெரும்பான்மையுடன் அதிமுக - திமுக இணைந்து வந்தாலும் ஆட்சி அமைக்கலாம் என தமிழக ஆளுநர் அர்லேகர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தவெக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக வெளியாகும் தகவல் தமிழக அரசியலில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. தவெக ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை இடங்களை பெற்றிராத நிலையில், அக்கட்சிக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்தது. இதன் மூலம் தவெக ஆதரவு எம்.எல்.ஏக்களின் பலம் 112 ஆக அதிகரித்துள்ளது. தவெக ஆட்சி அமைக்கத் தேவையான மெஜாரிட்டி பெற இன்னும் 6 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை.
இந்தச் சூழலில், தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற தவெக, ஆளுநர் அர்லேகரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியது. ஆனால், ஆளுநர், விஜய்யை ஆட்சி அமைக்க இதுவரை அழைப்பு விடுக்கவில்லை. 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருக்கிறதா எனக் கேட்டுள்ளார். இதனால், திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற மற்ற கட்சிகளின் ஆதரவைக் கோரி வருகிறது தவெக.
இந்தச் சூழலில், திமுக, அதிமுக ஆகியவை தனித்தனியாக தங்களது எம்.எல்.ஏ.க்கள் கூட்டங்களை நடத்தின. இதற்கிடையே, நேற்று முதல் திமுக - அதிமுக கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கப்போவதாக ஒரு தகவல் தீயாகப் பரவி வருகிறது.
இந்த நிலையில், ரிபப்ளிக் டிவிக்கு தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தொலைபேசி வாயிலாக ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில், "ஆட்சியமைக்கத் தேவையான உறுப்பினர்களின் எண்ணிக்கை அவசியம். அதன் பின்னர் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். ஆட்சியமைக்க உரிமை கோரி என்னை சந்திக்க வருவோரிடம் நான் கேட்பது ஒன்று தான். ஆட்சியமைக்கத் தேவையான உறுப்பினர்கள் உங்களிடம் உள்ளனரா என்பது தான்" எனத் தெரிவித்தார்.
அதிமுக திமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து வந்து ஆட்சியமைக்க உரிமை கோரினால் அனுமதி கொடுப்பீர்களா என எழுப்பிய கேள்விக்கு, "அப்படி வரும் போது அவர்களுக்கான எண்ணிக்கை இருக்கிறதா என்பதை பரிசீலனை செய்து முடிவெடுப்பேன். பதவிப்பிரமாணம் செய்து வைக்க நான் தயாராக இருக்கிறேன். ஆனால் சூழல் அப்படி இல்லை. இன்று எண்ணிக்கையை கொண்டு வந்தால் நாளையே பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறேன்" எனவும், தவெக தலைவர் விஜயை நான் தடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் தெரிவித்த இந்தக் கருத்து தவெகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைத்தால் தவெகவின் 108 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications