இலவச பஸ் பயணம், உரிமைத் தொகையை விஜய் தொடரவேண்டும்.. ஜவாஹிருல்லா நச்னு சொல்லிட்டாரு
சென்னை: தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள திரு. விஜய் அவர்களுக்கு வாழ்த்துகள். தமிழக மக்கள் அளித்துள்ள இந்தப் பெரிய பொறுப்பு, சாதாரண அரசியல் வெற்றியல்ல; மக்களின் எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கைகளையும் சுமக்கும் மகத்தான பொறுப்பாகும். அந்த நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில் புதிய அரசு செயல்படும் என எதிர்பார்க்கிறோம் என்று மனித நேய மக்கள் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியல் களம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தைக் கண்டுள்ளது. நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மக்களின் பேராதரவைப் பெற்று, தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ள விஜய்க்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் சமூக அமைப்புகளும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், மனிதநேயத்தையும் சமூக நீதியையும் முன்னிறுத்திச் செயல்படும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா, புதிய அரசுக்குத் தனது வாழ்த்துகளையும் ஆலோசனைகளையும் முன்வைக்கும் வகையில் விடுத்துள்ள முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
விஜய்க்கு ஜவாஹிருல்லா வாழ்த்து
அந்த அறிக்கையில், "தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள திரு. விஜய் அவர்களுக்கு மனிதநேயத்தையும் சமூக நீதியையும் விரும்பும் மக்களின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக மக்கள் அளித்துள்ள இந்தப் பெரிய பொறுப்பு, சாதாரண அரசியல் வெற்றியல்ல; மக்களின் எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கைகளையும் சுமக்கும் மகத்தான பொறுப்பாகும். அந்த நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில் புதிய அரசு செயல்படும் என எதிர்பார்க்கிறோம்.
மகளிர் உரிமைத் தொகை
கடந்த காலத்தில் திராவிட முன்னேற்றக் கழக அரசு தமிழகத்தில் கல்வி, சுகாதாரம், பெண்கள் நலன், சமூக நீதி, சிறுபான்மையினர் பாதுகாப்பு, தொழில் வளர்ச்சி மற்றும் மக்கள் நலத் திட்டங்கள் உள்ளிட்ட பல துறைகளில் முன்னேற்றமான பணிகளை மேற்கொண்டது. குறிப்பாக மகளிர் உரிமைத்தொகை, பெண்களுக்கான இலவச பேருந்து பயணம், பள்ளிக் கல்வி மேம்பாடு, மருத்துவ சேவைகள் விரிவாக்கம் போன்ற மக்கள் நலத் திட்டங்கள் பரவலான வரவேற்பைப் பெற்றன.
அந்த நல்லாட்சித் திட்டங்களையும் மக்கள் நலப் பணிகளையும் தொடர்ந்து முன்னெடுத்து செல்லும் பொறுப்பு புதிய அரசுக்கு உள்ளது. அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி, தமிழகத்தின் வளர்ச்சி, சமூக நல்லிணக்கம் மற்றும் அனைத்து தரப்பு மக்களுடைய நலனே முதன்மை பெற வேண்டும்.
முன்னேற்ற பாதையில் தமிழ்நாடு
தமிழகம் சமூக நீதி, மதச்சார்பின்மை, சகோதரத்துவம் ஆகிய அடிப்படை மதிப்புகளை நிலைநிறுத்திய மாநிலமாக தொடர்ந்து விளங்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறோம்.
புதிய முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் தலைமையிலான அரசு மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி தமிழகத்தை மேலும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார் பேராசிரியர்.












Click it and Unblock the Notifications