Advertisement

கொரோனா பரவல் தீவிரம்.. ஆக்சிஜன் தேவை அதிகரிப்பு - ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்கள் இயக்கம்


டெல்லி: நாடு முழுவதும் அதிகரித்து வரும் ஆக்சிஜன் தேவையை கருத்தில் கொண்டு சிறப்பு சரக்கு ரயில்களை இயக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் சிறப்பு ரயில்களாக இயக்கப்படும் இந்த டேங்கர் ரயில்கள் இன்று முதல் தங்கள் இயக்கத்தை தொடங்குகின்றன.

லக்னோவில் தலைவிரித்தாடும் கொரோனா.. ஆக்சிஜன் சிலிண்டருக்கு அலையும் மக்கள்!

கொரோனா தொற்று நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் 2.75 லட்சம் பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் நோயினால் தீவிரமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் ஆக்சிஜன் சிலிண்டர்களின் தேவை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல மாநிலங்களில் இந்த ஆக்சிஜன் சிலிண்டர்கள் சென்று சேர்வதில் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது.

ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களில் இருந்து ரயில் மூலம் ஆக்சிஜனை கொண்டு வருவதற்கு ரயில்வே துறையின் உதவியை மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்கள் நாடியுள்ளன. அத்துடன், திரவ மருத்துவ ஆக்சிஜன் மற்றும் சிலிண்டர்களை எடுத்து வருவதற்காக சரக்கு ரயில்களை இயக்க கோரிக்கை வைத்துள்ளன.

நாடு முழுவதும் அதிகரித்து வரும் ஆக்சிஜன் தேவையை கருத்தில் கொண்டும் பல மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ள ரயில்வே துறை சிறப்பு சரக்கு ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளது.

Advertisement
Advertisement

ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் சிறப்பு ரயில்களாக இயக்கப்படும் இந்த டேங்கர் ரயில்கள் இன்று முதல் தங்கள் இயக்கத்தை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை கலாம்போலி, பொய்சார் ரயில் நிலையங்களில் இருந்து காலி டேங்கர் ரயில்கள், ஆக்சிஜனை ஏற்றி வருவதற்காக விசாகப்பட்டிணம், ஜாம்ஷெட்பூர், ரூர்கேலா, பொகாரோ போன்ற இடங்களுக்கு விரைகின்றன. அடுத்த சில நாட்கள் ஆக்சிஜன் வினியோக நடவடிக்கைகள் தொடங்கும் என கூறப்படுகின்றது.

ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்கள் மூலம் நாட்டின் எந்த பகுதியில் ஆக்சிஜன் தேவைப்பட்டாலும் அந்த தேவையை பூர்த்தி செய்ய முடியும் என கூறப்பட்டுள்ளது. சில நாட்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.

நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் 12 மாநிலங்களுக்கு முறையே ஏப்ரல் 20, ஏப்ரல் 25 மற்றும் ஏப்ரல் 30 ஆம் தேதிகளில் மருத்துவ ஆக்சிஜனின் தேவையை பூர்த்தி செய்வதற்காக 4,880 மெட்ரிக், 5,619 மெட்ரிக் மற்றும் 6,593 மெட்ரிக் டன் ஒதுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். அனைத்து ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களிலும் அதன் கொள்ளளவுக்கு ஏற்ப ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களும், அதனை நிரப்பும் இடங்களும் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி அளித்திருப்பதோடு, ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் தடையின்றிச் செல்வதை உறுதி செய்யவும் பிரதமர் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு ஒன்இந்தியா தமிழ் டெலிகிராம் சானல்

English Summary

The Railways will run Oxygen Express over the next few days to transport liquid medical oxygen and oxygen cylinders across the country, the national transporter.
Read more...