பாத்திரம் கழுவிய கைகள் இனி சட்டசபையில்.! மம்தா கோட்டையை தகர்த்த வீட்டு பணிப்பெண் கலிதா மாஜி
கொல்கத்தா: மேற்கு வங்கத் தேர்தல் முடிவுகள் அம்மாநில அரசியலில் ஒரு மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக வீட்டில் பணிப்பெண்ணாக இருந்த பெண்ணின் வெற்றி ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மாதம் 2,500 ரூபாய் ஊதியத்தில் வீடுகளில் பாத்திரம் கழுவி, துப்புரவுப் பணி செய்து வந்த கலிதா மாஜி, இன்று மேற்கு வங்கத்தில் இருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகின. இந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் இந்திய அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தை எழுதியுள்ளன. தமிழகத்தில் ஒரு புதிய சக்தியின் உதயம், வங்காளத்தில் ஒரு நீண்ட காலக் கோட்டையின் வீழ்ச்சி எனப் பல அதிரடித் திருப்பங்கள் நிகழ்ந்துள்ளன. இவை மக்களின் மனநிலையில் ஏற்பட்டுள்ள மாபெரும் மாற்றத்தின் சாட்சியாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக மேற்கு வங்கத்தின் அவுஸ்கிராம் (Ausgram) தொகுதி முடிவுகள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கலிதா மாஜி
அரசியல் என்பது கோடீஸ்வரர்களுக்கும், வாரிசு அரசியல்வாதிகளுக்கும் மட்டுமேயானது என்ற பிம்பத்தை மேற்கு வங்கத்தின் அவுஸ்கிராம் தொகுதியில் உடைத்துத் தள்ளியுள்ளார் கலிதா மாஜி. குஸ்காரா நகராட்சியில் வசிக்கும் இவர், நான்கு வீடுகளில் வீட்டு வேலை செய்து கொண்டே தனது அரசியல் பயணத்தைத் தொடர்ந்தவர். கடந்த 2021ம் ஆண்டு தேர்தலிலேயே பாஜக இவருக்கு வாய்ப்பு கொடுத்தது.
வெற்றி
இருப்பினும், அந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் அபேதானந்த தண்டரிடம் 11,815 வாக்குகள் வித்தியாசத்தில் கலிதா மாஜி தோல்வி அடைந்தார். அவர் மீதான நம்பிக்கையைக் கைவிடாத பாஜக, இந்த முறை மீண்டும் அவருக்கு வாய்ப்பளித்தது. அந்த நம்பிக்கையை இப்போது வெற்றியாக மாற்றிக் காட்டியுள்ளார் கலிதா. இந்த முறை தேர்தலில் கலிதா மாஜி மொத்தம் 1,07,692 வாக்குகளைப் பெற்றுள்ளார். திரிணாமுல் வேட்பாளர் ஷியாமா பிரசன்ன லோஹரை 12,535 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளார்.
மேற்கு வங்க தேர்தல்
294 இடங்களைக் கொண்ட மேற்கு வங்கச் சட்டமன்றத்தில், 206 இடங்களைக் கைப்பற்றி பாஜக மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் மம்தாவின் 15 ஆண்டுக்கால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்தத் தேர்தலின் மிகப் பெரிய அதிர்ச்சியாக, முதல்வர் மம்தா பானர்ஜி தனது சொந்தத் தொகுதியான பவானிபூரில் பாஜக தலைவர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியடைந்துள்ளார். மேற்கு வங்கத்தில் 1972க்குப் பிறகு இப்போதுதான் மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சியமைக்கும் சூழல் உருவாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இந்த வெற்றியை "மேற்கு வங்கத்தில் தாமரை மலர்ந்துவிட்டது" எனக் கொண்டாடியுள்ளார்.
முதல்வர் யார்!
மேற்கு வங்கத்தில் சுவேந்து அதிகாரி முதல்வராகத் தேர்வாவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அவர் திரிணாமுல் காங்கிரஸில் இருந்து வந்தவர் என்பதால் அவரை ஏற்கச் சிலர் தயக்கம் காட்டுகிறார்கள். ஆடை வடிவமைப்பாளரான அக்னிமித்ரா பால், ரூபா கங்குலி ஆகிய பெண் தலைவர்களும் முதல்வர் ரேஸில் இருக்கிறார்கள்.
அதேபோல ஆர்எஸ்எஸ் பின்னணியைக் கொண்ட சமிக் பட்டாச்சார்யாவும் முதல்வராக வாய்ப்பு இருக்கிறது. மேலும், 2021ல் பாஜகவை வங்கத்தில் ஒரு பிரதான எதிர்க்கட்சியாக மாற்றியதில் முக்கிய பங்கு வகித்த திலீப் கோஷும் முதல்வர் ரேஸில் இருக்கிறார். இவர்களில் யாரேனும் ஒருவருக்கே பாஜக வாய்ப்பு கொடுக்கும் எனத் தெரிகிறது.














Click it and Unblock the Notifications