கனடா: பார்க்க பளபளன்னு இருந்தாலும், உண்மையில் கொடூரம்! பிரேகிங் பாயிண்ட் எட்டிய ஜோதி - இந்தியா ரிட்டன்
இந்தியப் பெண் ஒருவர் கனடாவில் மூன்று ஆண்டுகள் வாழ்ந்த பிறகு, பல போராட்டத்திற்கு பின்பு "பிரேகிங் பாயிண்ட்" எட்டிய காரணத்தால் இந்தியா திரும்பியுள்ளார்.
ஜோதி அட்னானி என்ற அந்தப் பெண் லிங்க்ட்இன் பக்கத்தில் பகிர்ந்த பதிவு பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஒரு காலத்தில் கனடாவில் தங்கி குடியுரிமை பெற வேண்டும் என்று கனவுடன் சென்ற அவருக்கு, கனடாவில் நடந்த விஷயங்கள் இதுக்கு மேல் இந்த நாட்டுல இருக்க முடியாது என்ற மனநிலையை கொடுத்துள்ளது. இதன் மூலம் இந்தியா திரும்பியுள்ளார். கனடாவில் அப்படி என்ன நடந்தது..? ஜோதி எதிர்கொண்ட பிரேகிங் பாயிண்ட் என்ன?

கனடா தான் என் எதிர்காலம் என்று நினைத்தேன்
2022-ம் ஆண்டு ஜோதி அட்னானியின் வாழ்க்கைத் திட்டம் முழுவதும் கனடாவைச் சுற்றியே இருந்தது. அங்கு தங்கி, கனடிய குடியுரிமை பெற்று, வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் உறுதியாக இருந்தார். "அப்போது என்னை யாராவது கேட்டால் கனடா, குடியுரிமை, செட்டில் ஆவது தான் லட்சியம் என்றே சொல்வேன். முழு திட்டமும் கனடாவாகத்தான் இருந்தது" என்று ஜோதி அட்னானி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மெல்ல மெல்ல வந்த வில்லன்
கனடா சென்ற சில காலம் புது இடம், புது மக்கள் என அனைத்தும் உற்சாகமாக இருந்தாலும், பார்க்கும் இடமெல்லாம் பிரம்மாண்டமாகவும் அழகாகவும் இருந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் கனடாவில் வாழ்க்கைச் செலவு அதாவது living cost பெரிய அளவில் அதிகரித்தது, வேலை வாய்ப்புகளும் குறைந்தது மற்றும் குடியேற்றக் கொள்கைகள் ஆகியவை பெரும் சவாலாக மாறின.
இதனால் என்னபோல இந்தியாவில் இருந்து வந்த அனைவரும் "வாழ்வதற்கே சிரமம் என்ற நிலைக்கு வந்துவிட்டோம். கனவு காண்பதை விட்டுவிட்டு உயிர் வாழ்வதே பெரிய விஷயமாகிவிட்டது" என்று ஜோதி தனது லின்கிடுஇன் பதிவில் எழுதியுள்ளார். இந்தப் பிரச்சினைகள் கூட அவரை இந்தியா திரும்ப வர வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கவில்லை.
இதுதான் பிரேகிங் பாயிண்ட்
ஜோதியின் பிரேகிங் பாயிண்ட் அவரது உடல்நலம். "என் பிரேகிங் பாயிண்ட் என்னவென்றால் உடல்நலம் தான். மிகவும் மோசமாகிவிட்டது. மிக மோசமாக" என்று அவர் தன் பதிவில் தெரிவித்துள்ளார்.
கனடாவின் சுகாதார அமைப்பு விலை உயர்ந்தது மட்டுமல்ல, சேவை பெறுவதும் மிகவும் கடினம் என்று அவர் சுட்டிக்காட்டினார். உடல் நலம் குன்றியபோது, மருத்துவர் சந்திப்பதற்கே நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டி நிலை இருந்தது. செலவும் அதிகம். இது உடலை மட்டுமல்ல, மனதையும், உணர்ச்சிகளையும், வங்கிக் கணக்கையும் பாதித்தது.
காசு கொடுத்தால் கூட மருத்துவ சேவை பெற முடியாதது, உரிய டாக்டரை சந்திக்க முடியாதது என அனைத்தும் பெரும் சுமையாக மாறியது மட்டும் இது என்னுடைய பிராகிங் பாயின்ட் ஆக மாறியது என ஜோதி அட்னானி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
கல்வி கடன்
உடல்நலப் பிரச்சினைக்கு மேல் கல்வி கடனும் இருந்ததால் நிலைமை மேலும் மோசமானது. "உடல்நலம் குன்றிய நிலையில், மருத்துவ சேவை கிடைப்பது கடினம், மருத்துவ செலவுகளும் அதிகம், தாமதமான சேவை என அனைத்தும் உடலை மட்டும் பாதிக்காது. மனம், உணர்வு, பணம் என அனைத்தையும் பாதிக்கும். அதோடு மாணவர் கடன் சேர்ந்தால் வாழ்க்கை நிலையற்றதாகிவிடும்" என்று ஜோதி விளக்கினார். இத்தகைய நிலை தான் என்னுடை பிரேகிங் பாயின்ட் ஆக இருந்தது என தெரிவித்துள்ளார்.
வேலையை விட்டுவிட்டு இந்தியா ரிட்டன்
இந்த நிலையில் ஜோதி தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு இந்தியா திரும்ப முடிவு செய்தார். கனடா அவருக்கு நிறைய கற்றுக் கொடுத்ததாகவும், அதற்கு அவர் நன்றி தெரிவித்தார். "கனடா வாழ்க்கை எனக்கு புதிய இடத்தில் ஜீரோவில் இருந்து தொடங்கி எப்படி வாழ்க்கையை கட்டமைப்பது என்பதை கற்றுத் தந்தது. புலம்பெயர்ந்தவர் என்றால் என்ன என்பதை உணர்த்தியது" என்று ஜோதி அட்னானி தனது பதிவில் தெரிவித்தார்.
இந்தியா வந்தும் 3 மாதங்களுக்கு பின்பு தான் லின்கிடுஇன் தளத்தில் தனது பணியிடத்தை கனடா என்பதில் இருந்து இந்தியா என மாற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதுமட்டும் அல்லாமல் இன்னும் அவரிடம் வொர்க் பர்மிட் உடன் கனடா விசா இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜோதி அட்னானியின் இந்த நேர்மையான பதிவு, கனடாவுக்குச் செல்ல விரும்பும் பல இந்திய இளைஞர்களுக்கு ஒரு முக்கிய செய்தியைச் சொல்கிறது - வெளிநாட்டு கனவு அழகானது என்றாலும், அங்கு வாழ்க்கை நிலையானதாக இருக்காது என்பதை உணர்த்துகிறது. இதற்கு ஏற்றார் போல் நம்மை நாம் தயார் செய்துக்கொள்ள வேண்டும், இல்லையெனில் மிகவும் கடினம்.












Click it and Unblock the Notifications