பாகிஸ்தானுக்கும், அமெரிக்காவுக்கும் பல்பு கொடுக்கும் ஈரான்.. ஒரே கண்டிஷன் - டிரம்ப்-க்கு அடுத்த செக்
அமெரிக்கா - ஈரான் மத்தியிலான பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தான் அரசு மிகப்பெரிய அளவில் ஏற்பாடுகளை செய்து வரும் வேளையில் ஈரான் அரசு ஊடகங்கள் வெள்ளிக்கிழமை அதிரடியாக ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளது.
அமெரிக்காவுடன் இஸ்லாமாபாத்தில் நாளை நடைபெற இருக்கும் அமைதிப் பேச்சுவார்த்தைக்காக ஈரான் உயர் அதிகாரிகள் யார் வருகிறார்கள் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், ஈரானின் இரு முக்கிய தலைவர்கள் பாகிஸ்தான் சென்றதாக வெளியான செய்திகளை முழுமையாக மறுத்துள்ளது ஈரான் அரசு.
இந்த மறுப்பு, இரு நாடுகளுக்கும் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறுமா என்பதில் புதிய சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இந்த திடீர் மனமாற்றத்திற்கு முக்கிய காரணம் லெபனான்.

ஈரான் ஊடகங்கள் விளக்கம்
தஸ்னிம் நியூஸ் ஏஜென்சி (Tasnim News Agency) வெளியிட்ட அறிக்கையின்படி, ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாஃப் ஆகியோர் நாட்டை விட்டு வெளியேறவே இல்லை. இருவரும் தெஹ்ரானில் தங்கள் பணிகளைத் தொடர்ந்து செய்து வருகின்றனர் என்று நன்கு அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக அறிவித்துள்ளது.
மேலும் 'ஈரான் பேச்சுவார்த்தைக் குழு இஸ்லாமாபாத் சென்று அமெரிக்காவுடன் பேச்சு நடத்த தயாராக உள்ளதாக சில ஊடகங்கள் வெளியிட்ட செய்தி முழுமையாக தவறானது' என்று தஸ்னிம் தெளிவாகக் கூறியுள்ளது. இந்த மறுப்பு தொடர்பான செய்தியை ஈரான் அரசு தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்பட்டது.
லெபனான் மையப்புள்ளி
ஈரான் தரப்பு தனது நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. 'அமெரிக்கா லெபனானில் போர் நிறுத்தத்துக்கான தனது உறுதிமொழியை நிறைவேற்றாத வரை, இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கும் வரை பேச்சுவார்த்தைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன' என்று ஈரான் அரசு வட்டாரம் தெரிவித்துள்ளதாக தஸ்னிம் விளக்கியுள்ளது.
இதே நிலைப்பாட்டை ஃபார்ஸ் நியூஸ் ஏஜென்சியும் (Fars News Agency) உறுதிப்படுத்தியுள்ளது. 'லெபனானில் போர் நிறுத்தம் உறுதி செய்யப்படாத வரை அமெரிக்க தரப்புடன் பேச்சு நடத்த எந்தத் திட்டமும் இல்லை' என்று ஃபார்ஸ் தெரிவித்துள்ளது.
வால் ஸ்ட்ரீட் ஜர்னல் அறிக்கை
அமெரிக்க ஊடகமான வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வியாழக்கிழமை இரவு ஈரான் அரசு தரப்பு குழு இஸ்லாமாபாத் வந்துவிட்டதாகக் கூறியிருந்தது. ஆனால் ஈரான் அரசு இந்த அறிக்கையை முழுமையாக பொய் என்று நிராகரித்துள்ளன. ஈரான் தரப்பு பாகிஸ்தானுக்கு தெளிவான செய்தியை அனுப்பியுள்ளது. 'லெபனான் போர் நிறுத்தத்தில் அமெரிக்கா தனது பொறுப்பை நிறைவேற்றாவிட்டால் ஈரான் குழு இஸ்லாமாபாத் செல்லாது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லெபனானில் அமைதி ஏற்படாமல் அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்த முடியாது என்ற உறுதியான நிலைப்பாட்டை ஈரான் வெளிப்படுத்தியுள்ளது. இது மேற்கு ஆசியப் பகுதியில் நிலவும் பதற்றத்தை நாளுக்கு நாள் சிக்கலாக்கியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் இந்தப் பேச்சுகளில் விவாதிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், லெபனான் பிரச்சனை பெரியதாக வெடித்துள்ளது.
இதற்கிடையில் இஸ்ரேல் லெபனான் நாட்டின் மீது மிகப்பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது மூலம் பலர் உயிரிழந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications