இந்தியா வேற லெவல் தான்.. பாகிஸ்தானிடம் இருந்து வந்த திடீர் பாராட்டு! என்ன மேட்டர் தெரியுமா
இஸ்லாமாபாத்: மத்திய கிழக்கில் ஈரான் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உச்சத்தைத் தொட்டுள்ளது.. இந்த நெருக்கடியை இந்தியா திறம்படச் சமாளிப்பதாகப் புகழ்ந்துள்ள பாகிஸ்தான் பெட்ரோலியத் துறை அமைச்சர் அலி மாலிக், தன்னுடைய நாடு ஏன் திணறுகிறது என்பது தொடர்பாகவும் விளக்கிப் பேசியுள்ளார்.
இதன் காணமாக தெற்காசிய நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாகப் பாகிஸ்தானில் மிக மோசமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அங்கு கடுமையான விலைவாசி உயர்வும் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே இந்தியா இந்த நிலைமையைத் திறமையாகக் கையாள்வதாகத் தெரிவித்துள்ள பாகிஸ்தான் பெட்ரோலியத்துறை அமைச்சர் அலி மாலிக், பாகிஸ்தானில் நிலைமை மோசமாகவே இருப்பதாகக் குறிப்பிட்டார்.

இந்தியாவுக்குப் பாதிப்பு இல்லை
இந்தியா எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே அதன் வெற்றிக்கான ரகசியம் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், இந்தியா இந்த விலை உயர்வால் பாதிக்கப்படாமல் இருக்க முக்கியக் காரணங்களாக அவர் முன்வைத்தார். முதலில் இந்தியாவிடம் 600 பில்லியன் டாலர் மதிப்பிலான அந்நியச் செலாவணி கையிருப்பு உள்ளது. இது பொருளாதார அதிர்ச்சிகளைத் தாங்கும் வலிமையை அளிக்கிறது. ஆனால், பாகிஸ்தானிடம் அந்தளவுக்கு அந்நியச் செலாவணி கையிருப்பில் இல்லை.
மேலும், இந்தியா சுமார் 60 முதல் 70 நாட்களுக்குத் தேவையான எண்ணெய்யைச் சேமித்து வைத்துள்ளது. ஒரு கையெழுத்துப் போட்டால் இந்த எண்ணெய்யைச் சந்தைக்குக் கொண்டு வந்து விலையைக் குறைக்க இந்தியாவால் முடியும். அதாவது எமெர்ஜென்சி சூழலுக்குப் பயன்படுத்த இந்தியாவிடம் சுமார் 8 வாரங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு இருக்கிறது. விலை கட்டுக்கடங்காமல் உயரும்போது அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அலி மாலிக் வேதனை
இந்தியாவுடன் ஒப்பிடுகையில் பாகிஸ்தான் நூலிழையில் ஊசலாடிக் கொண்டிருப்பதாக அலி மாலிக் வேதனை தெரிவித்துள்ளார்.. இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "எமெர்ஜென்சி சூழலில் பயன்படுத்தப் பாகிஸ்தானிடம் ஒரு நாளைக்குக் கூடத் தேவையான எண்ணெய் இருப்பு கிடையாது. வணிக ரீதியான உள்ள கச்சா எண்ணெய் இருப்பு கூட வெறும் 5 முதல் 7 நாட்களுக்கு மட்டுமே வரும்.
மேலும், இந்தியா சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தில் இல்லை. எனவே, உலகளவில் எண்ணெய் விலை உயர்ந்தபோது, தங்களது வரி விதிப்பைக் குறைப்பதன் மூலம் நாட்டு மக்களைப் பாதுகாக்க அவர்களால் முடிந்தது. அதற்கான நிதி சுதந்திரம் இந்தியாவிடம் இருந்தது. ஆனால் பாகிஸ்தானின் நிலை அப்படி இல்லை. உயர்ந்து வரும் பெட்ரோல் விலையில் இருந்து மக்களுக்குச் சிறு நிம்மதியையாவது வழங்க, நாங்கள் சர்வதேச நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.
சர்வதேச நிதியம்
எங்கள் பட்ஜெட்டின் போது, நஷ்டத்தைக் குறைக்க பெட்ரோல் மற்றும் டீசல் மீது கூடுதல் வரி வசூலிப்போம் என்று உறுதியளித்த பிறகே வரியைக் குறைக்க அனுமதி அளித்தனர். தற்போது டீசல் விலை 3 முதல் 4 மடங்கு வரை உயர்ந்துள்ள நிலையில், டீசல் மீதான வரியை முற்றிலுமாக நீக்க முடிவு செய்துள்ளோம். இந்த சுமையை பெட்ரோல் மீது மாற்றியுள்ளோம்.
அதே சமயம், இருசக்கர வாகன ஓட்டிகளுக்குப் பாதிப்பு ஏற்படாமல் இருக்க அவர்களுக்கு மானியம் வழங்கிப் பாதுகாக்கிறோம். தீவிரப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, பெட்ரோல் லிட்டருக்கு 80 ரூபாய் வரியைக் குறைக்க IMF-ஐ நாங்கள் சம்மதிக்க வைத்துள்ளோம். ஆனால், இந்தியாவுக்கு அப்படி எந்தவொரு நிர்ப்பந்தமும் இல்லை. சர்வதேச நிதியத்தின் திட்டத்தில் இந்தியா இல்லாததால் அவர்கள் யாரிடமும் அனுமதி கேட்கத் தேவையில்லை" என்றார்.
இந்தியா vs பாகிஸ்தான்
அதாவது இந்தியா IMF கட்டுப்பாட்டில் இல்லாததால் சுதந்திரமாக முடிவெடுக்கிறது, ஆனால் பாகிஸ்தான் ஒவ்வொரு வரி குறைப்பிற்கும் IMFன் அனுமதியைப் பெற வேண்டியுள்ளது என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார். பாகிஸ்தான் பொருளாதாரம் ஏற்கனவே மோசமாக இருந்ததால் அவர்கள் உதவிக்காகச் சர்வதேச நிதியத்திடம் கடன் வாங்கி இருந்தார்கள். இதனால் இப்போது சர்வதேச நிதியட்டின் நிபந்தனைகளைப் பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் இருக்கிறது. இதுவும் ஒரு காரணம் என்கிறார் பாகிஸ்தான் பெட்ரோலியத்துறை அமைச்சர்!












Click it and Unblock the Notifications