கத்தாரில் இருக்கும் இந்தியர்களுக்கு குட்நியூஸ்.. ஈரான் போருக்கு பின் விடிவு காலம்!
மத்திய கிழக்கு போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து, கத்தார் தனது ஹமாத் சர்வதேச விமான நிலையத்தை வெளிநாட்டு விமானங்களுக்கு மீண்டும் திறந்துவிட்டுள்ளது. கத்தார் சிவில் ஏவியேஷன் அமைப்பு திங்கட்கிழமை வெளியிட்ட அறிவிப்பின்படி, ஈரான் போர் தொடங்கியதிலிருந்து முதல் முறையாக வெளிநாட்டு விமானங்கள் பயன்படுத்த விமான நிலையம் திறக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தி போரை துவங்கியது, இதன் பின்பு ஏப்ரல் 8 அன்று இரு வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இந்த போரால் ஏற்பட்ட பதற்றத்தின் காரணமாக, கத்தார் தனது வான்வெளியை முழுமையாக மூடியது.

ஈரானின் தாக்குதல்களால் வளைகுடா நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டு பகுதியில் இருக்கும் பெரும்பாலான விமான நிலையங்கள் மூட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. இந்த நிலையில் மார்ச் 7 முதல் கத்தார் விமான நிலையத்தில் சேவைகள் ஓரளவுக்கு துவங்கப்பட்டாலும், அந்நாட்டு அரசின் கத்தார் ஏர்வேஸ் மட்டுமே இயங்க அனுமதிக்கப்பட்டது.
அமெரிக்க ராணுவ தளங்கள் உள்ள நாடுகளில் ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது. இந்த தாக்குதலில் கத்தாரில் இருக்கும் அமெரிக்கா ராணுவ தளங்களை குறிவைத்து தாக்கப்பட்டது மட்டும் அல்லாமல் இதன் அந்நாட்டின் எரிவாயு உற்பத்தி தளத்தின் மீதும் தாக்குதல் நடந்தது. உலகின் மிகப்பெரிய திரவ இயற்கை எரிவாயு ஏற்றுமதி மையமான ராஸ் லஃபான் தொழிற்சாலை கடுமையாக சேதமடைந்துள்ளது.
இந்த தாக்குதலால் கத்தாரின் LNG ஏற்றுமதி திறனில் சுமார் 17% பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வருடத்திற்கு சுமார் 20 பில்லியன் டாலர் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த பாதிப்பு 3 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கலாம் என்பதால், உலக எரிசக்தி விநியோகத்தில் நீண்டகால சிக்கல்கள் உருவாகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், தற்போது வெளிநாட்டு விமானங்களும் படிப்படியாக இயங்க அனுமதிக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது. கத்தார் சிவில் ஏவியேஷன் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், "Airmen-க்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளோம். இதன் மூலம் ஹமாத் சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டு விமானங்களின் இயக்கம் படிப்படியாக தொடங்கும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த முடிவு தற்போதைய போர் அச்சத்தை முழுமையாக ஆய்வு செய்த பிறகு எடுக்கப்பட்டதாகவும், அனைத்து அரசு அமைப்புகளுடன் இணைந்து ஆலோசனை செய்து அறிவிக்கப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு கத்தாரில் பணியாற்றும் பல்லாயிரக்கணக்கான இந்தியர்களுக்கு பெரும் நிம்மதியை அளிக்கிறது. வெளிநாட்டு விமானங்கள் மீண்டும் இயங்கத் தொடங்குவதால், இந்தியாவுக்கு வரும் மற்றும் செல்லும் பயணங்கள் எளிதாகும். இதுவரை கத்தார் ஏர்வேஸ் மட்டுமே இயங்கியதால் பயணிகளுக்கு பெரும் சிரமம் இருந்தது. இப்போது வெளிநாட்டு விமான நிறுவனங்கள் இணைந்தால், விமான கட்டணங்கள் குறையவும் வாய்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications