PMAY திட்டத்தில் பணம் வாங்கியவர்களுக்கு ட்விஸ்ட்.. தென்காசி வழக்கில் ஐகோர்ட் அதிரடி உத்தரவு
தென்காசி: தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரையில் மத்திய அரசின் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) திட்டத்தின் கீழ் தகுதியற்ற நபர்களுக்கு முறைகேடாக மானியம் வழங்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் 12 பேருக்கு தவறாக வழங்கிய தொகையை மீட்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை பேரூராட்சி பகுதியைச் சேர்ந்த அருணகிரி தாக்கல் செய்த மனுவில், 2020 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் நீதிமன்றத்தை அணுகியதாக தெரிவிக்கப்பட்டது. அந்த மனுவில், திட்ட விதிமுறைகளை மீறி தகுதியற்ற நபர்களுக்கு வீடு மானியம் வழங்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ் குமார், ஜோதிராமன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், தென்காசி மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் மனுதாரர் கூறிய புகாரில் உண்மை இருப்பது உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அதில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் 8 பேருக்கும், பேரூராட்சி நிர்வாகம் மூலம் 4 பேருக்கும் என மொத்தம் 12 தகுதியற்ற நபர்களுக்கு மானியம் வழங்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
மேலும், முறைகேடாக மானியம் பெற்றவர்களில் ஒருவர் தொகையை ஏற்கனவே திருப்பிச் செலுத்தியுள்ளதாகவும், மீதமுள்ளவர்களிடமிருந்து தொகையை வருவாய் மீட்புச் சட்டம் கீழ் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதேபோல், இந்த முறைகேட்டிற்கு காரணமான அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் விளக்கப்பட்டது. இதனை பதிவுசெய்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள், முறைகேடுகள் கண்டறியப்பட்டு, தொகை மீட்பு மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள் நடைபெற்று வருவதால், மேலதிக உத்தரவுகள் தேவையில்லை எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.
ஏழை எளிய மக்களுக்காக மத்திய அரசின் உன்னத திட்டங்களில் ஒன்றான வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் மக்கள் பயன்பெற்ற நிலையில் ஒரு சிலர் இதை பயன்படுத்திக் கொண்டு போலியான ஆவணங்களை சமர்ப்பித்து மோசடியாக அரசு பணத்தை அபகரித்த 12 பேரின் பணத்தை மீண்டும் செலுத்த உத்தரவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications