தர்மபுரியில் சட்டவிரோத மது விற்பனை.. கடைகளை நொறுக்கிய பெண்கள்.. உரிமையாளர் தலைதெறிக்க ஓட்டம்
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே சட்டவிரோதமாக நான்கு இடங்களில் மது விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், ஆத்திரம் அடைந்த பெண்கள் மதுக்கடையை சுற்றி வளைத்து அடித்து நொறுக்கினர். இதற்கு கடையை நடத்தி வந்த கோவிந்தன் என்பவர் எதிர்ப்பு தெரிவித்ததால், அவரை சுற்றி வளைத்து பெண்கள் தாக்க முற்பட்டனர். இதனால், தலைதெறிக்க கோவிந்தன் ஓட்டம் பிடித்தார்.
தமிழகத்தில் சில இடங்களில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து குற்றச்சாட்டு முன் வைத்து வருகிறார்கள். குறிப்பாக டாஸ்மாக் கடைகளை திறக்கும் முன்பே சரக்கை வாங்கி பிளாக்கில் ஓட்டுவது.. டாஸ்மாக் கடை லீவு என்றால் முன்கூட்டியே வாங்கி வைத்துக்கொண்டு கொள்ளை லாபத்தில் சட்ட விரோத மதுபான விற்பனையில் ஈடுபடுவது போன்ற செயல்களில் சிலர் ஈடுபடுகிறார்கள் என குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.

விரட்டி அடித்த பெண்கள்
இதனால், தேவையில்லாத பிரச்சினைகளும் ஏற்படும் சூழலும் நிலவுகிறது. இது போன்ற விவகாரங்களில் போலீசில் புகாரளித்தாலும், முழுமையாக இந்த பிரச்சினை ஓய்ந்தபாடில்லை. இந்த நிலையில்தான், தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட நபர்களை பெண்களே விரட்டியடித்துள்ளனர். இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது பற்றிய விவரம் வருமாறு:-
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே சந்துக்கடைகள் எனப்படும் சட்டவிரோத மதுக்கடைகள் ஏராளமானவை செயல்பட்டு வருகின்றன. இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
அடித்து துவம்சம் செய்த பெண்கள்
அதிகாலை முதலே மது விற்பனை நடைபெறுவதால் அதனை வாங்கி குடிக்கும் மது பிரியர்கள், அவ்வழியாக செல்லும் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகளை கேலி செய்வது என அத்துமீறியுள்ளனர். இதனால் கோபம் அடைந்த பெண்கள் அப்பகுதி இளைஞர்கள் சிலரை அழைத்துக்கொண்டு போடூர் பகுதியில் செயல்பட்டு வந்த மதுக்கடைகளை அடித்து துவம்சம் செய்தனர்.
அப்போது பொதுமக்களிடம் எதிர்ப்பு தெரிவித்த ஒரு கடை உரிமையாளரை பெண்கள் ஒன்று சேர்ந்து எதிர்க்கவே ஆளை விட்டால் போதும் என தலைதெறிக்க ஓட்டம் பிடித்தார். இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. இதற்கிடையே, பென்னாகரம் போலீசார் மதுபானங்களை விற்றதாக 3 பேரை கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications