கண்ணதாசனை காணுவோம்
4. சேதி சொல்லடி ..
அந்தச்-சிவகாமி ------------ மகனிடம் சேதி சொல்லடி-என்னைச்
சேரும் நாள் பார்க்கச் சொல்லடி!
வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி?
வேலன் இல்லாமல் தோகை ஏதடி?
கண்கள் சரவணன் சூடிடும் மாலை
கன்னங்கள் வேலவன் சூடிடும் சோலை
பெண்ணென பூமியில் பிறந்த பின்னாலே
வேலை வணங்காமல் வேறென்ன வேலை?
நெஞ்சே தெரியுமா அன்றொரு நாளிலே
நிழலாடும் விழியோடும் ஆடினானே-அன்று
நிழலாடும் விழியோடு ஆடினானே
கண்ணில் நின்றாடச் சொல்லடி!
அவன்: மலையின் சந்தனம் மார்பின் சொந்தம்
மங்கையின் இதயமோ காளையின் சொந்தம்!
அவள்: நிலையில் மாறினால் நினைவும் மாறுமோ?
நெஞ்சம் நெருங்கினால் பேதங்கள் தோன்றுமோ?
காலம் மாறினால் காதலும் மாறுமோ?
அவன்: மாறாது மாறாது இறைவன் ஆணை!
இரு: என்றும்-மாறாது மாறாது இறைவன் ஆணை!
அவன்: இந்தச்-சிவகாமி மகனுடன் சேர்ந்து நில்லடி
இன்னும் சேரும் நாள் பார்ப்ப தென்னடி? - வேறு
எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி?- தோகை
இல்லாமல் வேலன் ஏதடி?
அவள்: அந்தச் சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி
என்னைச் சேரும் நாள் பார்க்கச் சொல்லடி!
5. கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா?
கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா
சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா
சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா? (கல்)
கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம்
கல்லைக்கனி ஆக்கும் உந்தன் ஒரு வாசகம்
உண்டென்று சொல்வதுந்தன் கண்ணல்லவா
- வண்ணக் கல்லல்லவா
இல்லையென்று சொல்வதுந்தன் இடையல்லவா
- மின்னல் இடையல்லவா!
கம்பன் கண்ட சீதை உந்தன் தாயல்லவா!
காளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவா!
அம்பிகாபதி அணைத்த அமராவதி-மங்கை அமராவதி
சென்ற பின்பு பாவலர்க்கு நீயே கதி! - என்றும் நீயே கதி! (கல்)
6. கட்டித் தங்கம் வெட்டியெடுத்து
கட்டித் தங்கம் வெட்டி எடுத்து
காதல் என்னும் சாறு பிழிந்து
தட்டிதட்டிச் சிற்பிகள் செய்த உருவமடா!-அவள்
தளதளவென்று ததும்பி நிற்கும் பருவமடா!... (கட்டி)
தொட்டுத் தொட்டு நின்றன கைகள்!
சுட்டுச் சுட்டுக் கொன்றன கண்கள் - தான்
கிட்டக் கிட்ட வந்தது கண்டு
எட்டி எட்டிச் சென்றது வண்டு!... (கட்டி)
தங்கரதம் போல வருகிறாள்! - அல்லித்
தண்டுகள் போலே வளைகிறாள்!
குங்குமப் பூப்போல் சிரிக்கிறாள்-இன்பக்
கோட்டைக்கு என்னை அழைக்கிறாள்!... (கட்டி)
காலையில் மலரும் தாமரைப் பூ! - அந்திக்
கருக்கலில் மலரும் மல்லிகைப் பூ!
இரவில் மலரும் அல்லிப்பூ! - அவள்
என்றும் மணக்கும் முல்லைப் பூ!... (கட்டி)