வேகமா? விவேகமா?
ஒரு காலத்தில் மிகுந்த வலிமையுடனும், பலத்துடனும் எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் பெற்று விளங்கிய கட்சி,திராவிட முன்னேற்றக் கழகம். தொண்டர்களின் மகத்தான ஆதரவுடன் எப்படிப்பட்ட போராட்டத்தையும்எதிர்கொள்ளும் சக்தி படைத்த கட்சியாக விளங்கி வந்தது.
முன்பு எம்.ஜி. ஆர் ஆட்சி காலத்தில் பலவிதமானபோராட்டங்களில் ஆர்வத்துடன் ஈடுபட்டும், பொதுவேலைநிறுத்தம் போன்ற போராட்டங்களில் காவல்துறையின்அடக்குமுறைகளை எல்லாம் வெற்றிகரமாகச் சமாளித்தும் தீவிரமாகப் போராடிய கட்சி. பலமுறை துப்பாக்கிச்சூடுவரை சென்றும் கூட திமுவினரின் போராட்டக்குணம் மழுங்கியதும் இல்லை, மங்கியதும் இல்லை.
எம்.ஜி.ஆர்அவர்களே திமுக தொண்டர்களின் போராட்டக்குணத்தைக் கண்டு வியந்து பாராட்டியிருக்கிறார். அப்படிப்பட்டஅக்கட்சியின் இன்றைய நிலை என்ன? இன்று அக்கட்சியில் தொண்டர்களின் ஆற்றல் குறைந்து வலிமைகுன்றியுள்ளதா?
அண்மையில் சென்னையில் நடந்த மாநகராட்சி வார்டு தேர்தலில் திமுகவினரை ஓட ஓட விரட்டி விரட்டிஅடித்துள்ளனர் அதிமுகவினர். அதுமட்டுமா? அராஜகமாக வாக்குச்சாவடிக்குள் புகுந்த அதிமுகவினர் அங்கிருந்தஅனைவருக்கும் தர்மஅடி கொடுத்து விரட்டிவிட்டு வாக்குகளை அவர்களே பதிவு செய்திருக்கிறார்கள். எதிர்த்துவாதாடிய திமுகவின் வேட்பாளருக்கு அரிவாள் வெட்டு! திமுகவின் பரிதியின் கார் அடித்து நொறுக்கப்பட்டு அவர்ஓடி ஒளியும் அவல நிலை! அடி, உதை, குத்து, வெட்டு என்று பொறுக்க முடியாமல் ஓடிய திமுகவினரை விரட்டிவிரட்டி அடித்திருக்கிறார்கள். திமுகவினர் மட்டும் அடி உதை வாங்கவில்லை. கூட்டணிக்கட்சியினர் மற்றும்வாக்களிக்க வந்த பொதுமக்களுக்கும் தர்ம அடி தரத் தயங்கவில்லை அதிமுகவினர். தங்களுக்கு வேண்டியபோலீசாரை அங்கு பாதுகாப்புக்கு வைத்துக்கொண்டு திட்டமிட்டு அராஜகத்தை அரங்கேற்றியுள்ளனர்.இவ்வழக்கை விசாரித்த நீதிபதி அவர்கள் இந்நிகழ்ச்சிக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஓட்டு எண்ணிக்கை முடிந்து முடிவை அறிவிக்கும் போதுதான் எப்போர்ப்பட்ட அறிவிலிகள் நிறைந்த கூட்டத்திடம்அடி வாங்கி இருக்கிறார்கள் என்பது புலனாகின்றது. பிரதான எதிர்க்கட்சியான திமுவிற்குக் கிடைத்த ஓட்டை விடசெல்லாத ஓட்டுகள் அதிகமாம். திமுகவிற்கு அதுவும் சென்னையில் வெறும் ஆயிரத்து ஐநூறு ஓட்டுகள் மட்டுமேகிடைத்துள்ளதாம். அதிமுகவிற்கு கிட்டத்தட்ட எட்டாயிரம் ஓட்டுகள். அதிமுகவைத் தவிர மற்ற அனைத்துவேட்பாளர்களும் டெபாசிட்டை இழந்து விட்டனராம். பொய் கூறினாலும் பொருத்தமாகக் கூற வேண்டும் என்றசாதாரண அடிப்படை அறிவுகூட இல்லாத ஒரு கூட்டம் வன்முறையை கையில் எடுத்துக்கொண்டு இந்தியஜனநாயமுறையையே கேளிக்கூத்தாக்கி மகிழ்கின்றது.
ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டிய சக்திகள் கைகட்டி வேடிக்கை பார்க்கின்றன. எதிர்க்கட்சிகளும் சரி,பத்திரிக்கைகளும் சரி இந்நிகழ்வை மிகச்சாதரணமாக எடுத்துக்கொண்டதுதான் மிகவும் ஆச்சரியத்திற்குரியஒன்றாகும். மிகப்பெரிய அளவில் எதிர்ப்புக்குரல் எழவில்லை. தொடர் நடவடிக்கைகளும் இல்லை. அடங்கிஒடுங்கி ஆமைகளாக ஊமைகளாகப் பரிதாபமாகக் காட்சியளிக்கின்றனர். அடியையும் வாங்கிகொண்டுஅமைதியாய் அடங்கிக் கிடக்கிறார்கள். சரி மற்றக் கட்சிகளை விடுங்கள். திமுகவிலும் ஏன் இந்தச் சோர்வு நிலை?
திமுகவிற்கு முன்புபோல் வலிமை இல்லை! தொண்டர்களிடமும் சக்தியில்லை! கட்சியில் உறுதியாக உழைக்கும்இரண்டாம் மட்டத்தலைவர்கள் இல்லை! வன்முறை எதிர்க்கும் துணிவும் இல்லை! கட்சியின் எல்லா மட்டத்திலும்துடிக்கும் இளமை இல்லை! செயல் வேகம் இல்லை! திட்டமிட்டு செயல்படும் நிலையும் இல்லை!
உடனே, நாம் இப்படி அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வந்துவிடக்கூடாது.
இன்றைய அரசியல் சூழ்நிலையையும் கண்டிப்பாகக் கவனிக்க வேண்டும். அன்று ஆரம்ப காலக்கட்டங்களில்எம்.ஜி.ஆர் தலைமையில் நடந்த அதிமுக ஆட்சியில் குண்டர்களுடனும் ரவுடிகளுடனும் காவற்துறைகைகோர்த்துக்கொண்டு எதிர்க்கட்சிகளை நசுக்கவில்லை. எதிர்க்கட்சிகளும் அரசியல் ரீதியிலானஅறப்போராட்டங்களில் ஈடுபட்டு போராட்டங்களில் வெற்றி பெறத் தொடங்கின. ஒரு காலகட்டத்தில் எம்.ஜி.ஆர்அவர்களே இதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் இனி எதிர்க்கட்சியின் போராட்டங்களை மக்கள்பார்த்துக்கொள்வர்கள் என்று கூறத் தொடங்கினார். இப்படி மக்கள் பார்த்துக்கொள்வார்கள் என்று எம்.ஜி.ஆரால்அன்று பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்கப்பட்டதின் பரிணாம வளர்ச்சியே இன்றைய நிலை! ஜெ. ஆட்சியில்இன்னும் ஒருபடி மேலே சென்று ரவுடிகளும் போலீசரும் இணைந்து பார்த்துக்கொள்கின்றனர்.
சரி இப்படிப்பட்ட அரசியல் சூழலில் வேகம் சிறந்ததா? விவேகம் சிறந்ததா? வன்முறைக்கு ஒருபோதும் வன்முறைதீர்வாகாது. விவேகமாகச் செயல்படுவதே சிறந்தது. அப்படிப்பட்ட விவேகத்துடன்தான் திமுகவின் தலைமைசெயல்படுகின்றது என்றே தோன்றுகின்றது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் திமுகவிற்கு ஒரு பொன்முடி மட்டும்போதாது! ஆயிரம் பொன்முடிகள் உருவாக வேண்டும்!
- அக்னிப்புத்திரன் ([email protected])
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.