சோளகர் தொட்டி: நூல் விமர்சனம்
வீரப்பனை சுட்டுக் கொன்ற அதிரடிப்படையினரை தமிழகமே பாராட்டித் தீர்த்து விட்டது. அவர்களுக்கு ஏராளமான பரிசுகள், பதவி உயர்வுகள்.மகிழ்ச்சிதான். ஆனால் வீரப்பனைத் தேடுகிறோம் என்று அப்பாவி பழங்குடி மக்களின் மீது அதிரடிப்படையினர் நடத்திய கொடுந்தாக்குதலுக்கு ஆள்வோர்என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?
அமைதியான குளம் போலிருந்த இவர்களது வாழ்க்கை, தேடுதல் வேட்டையின்போது சேறும் சகதியுமாக சின்னா பின்னமானதே, அதற்கு என்னதான்பரிகாரம்? நெஞ்சை கனக்க வைக்கும் கேள்விகளை நம்முன் வைக்கிறது சோளகர் தொட்டி நாவல்.
நாவலின் முதல் பாதியில், தொட்டி என்னும் ஊரில் வாழும் சோளகர் பழங்குடி மக்களின் வாழ்க்கை முறை அழகாக நம்முன் விரிகிறது. அவர்களது உணவு,தொழில், திருமணம், திருவிழாக்கள் ஆகியவற்றை நாவலாசிரியர் ச.பாலமுருகன் ஆர்ப்பாட்டமில்லாமல் விவரித்துச் செல்கிறார். நகரத்து நெரிசலில் மூச்சுத்திணறியிருக்கும் நமக்கு, சோளகர் மக்களின் வாழ்க்கை முறை மீது ஒரு காதலே வந்து விடுகிறது.
வாசகர்கள் இதுவரை சந்தித்திராத ஒரு களனை மையமாக வைத்து ஒரு படைப்பை எழுதும்போது, பெரும்பாலான படைப்பாளிகள் அந்தக் களனைவாசகர்களுக்கு முழுமையாக அறிமுகப்படுத்தும் நோக்கில், அதை ஒரே மூச்சில் விஸ்தாரமாக எழுதிச் செல்வார்கள். அது வாசகனுக்கு ஒரு ஆவணப்படம் பார்க்கும் மனநிலையை ஏற்படுத்தும். ஆனால் ச.பாலமுருகன் அவ்வாறில்லாமல், பழங்குடி மக்களின் வாழ்க்கை முறையை போகிற போக்கில்சொல்லிக் கொண்டு செல்கிறார்.
இரண்டாவது பாதியில், வீரப்பன்- அதிரடிப்படை விளையாட்டில் இந்த அப்பாவி மக்கள் சிக்ண்ண்டு தவிப்பது நெஞ்சை உலுக்கும் வகையில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. மனிதத் தன்மை கொஞ்சமும் அற்ற வகையில் இவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், நாம் வாழ்வது நாகரிக உலகத்தில்தானா என்றகேள்வியை எழுப்புகிறது.
படித்து முடிக்கும்போது, நம் மனதில் பெரும்பாரம் ஒன்று ஏறிவிடுகிறது. இதை நாவல் என்று சொல்வதை விட ஒரு வரலாற்றுப் பதிவு என்றுசொல்லலாம்.












Click it and Unblock the Notifications