குமரியில் தொடங்கியது ஓணம் கொண்டாட்டம்!
கேரள மக்களின் வசந்த கால விழாவாக ஓணம் கொண்டாடப்படுகிறது. மாவேலி சக்கரவர்த்தி மக்களை பார்க்க வரும் நாளாக ஓணம் கருதப்படுகிறது. அன்றைய தினம் பூக்களால் வீடுகள் அலங்கரிக்கப்படும். மாவேலி மன்னனை மக்கள் அன்புடன் வரவேற்று உபசரிக்கும் இந்த விழா கேரள மக்களின் முக்கிய பண்டிகை ஆகும்.
ஆண்டுதோறும் ஆவணி மாதம் பிறந்ததும் ஓணம் கொண்டாட்டங்கள் தொடங்கிவிடுகின்றன. ஜாதி மற்றும் மத உணர்வுகளுக்கு அப்பற்பட்டு இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.
கேரளாவில் ஓணத்தை ஓட்டி போனஸ் வழங்கப்படுவதால் வியாபாரம் சார்ந்த தொழில்களும் தற்போது சூடுபிடித்துள்ளது. அஸ்தம் நட்சத்திரத்தில் ஓணம் தொடங்குகிறது. "அத்தம் பத்தினு பொன் ஓணம்" என்று மலையாள மக்கள் மகிழ்ச்சியோடு பாடுவது கேரள எல்லையில் ஒலிக்க தொடங்கியுள்ளது.
வரும் செப்டம்பர் 12ம் தேதி ஓணம் கொண்டாடப்படுகிறது. திருவனந்தபுரம், பாறசாலை, நெய்யாற்றிகரை உட்பட அனைத்து பகுதிகளிலும் கட்டிடங்கள் மற்றும் வீடுகளில் வர்ணம் பூசும் வேலைகளோடு ஓணம் கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன.
அடுத்த மாதத்தில் முதல் இரண்டு வாரத்தில் திருவனந்தபுரம் வரும் ரயில்கள் மற்றும் ஓணம் முடிந்து செல்லும் ரயில்களில் முன்பதிவு முடிந்து விட்டன.
தமிழக-கேரள எல்லையான கன்னியாக்குமரி மாவட்டத்திலும் ஓணம் கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர்.
இந்த பண்டிகையில் ஊஞ்சல், ஓணப்பந்து போன்ற் விளையாட்டு போட்டிகள் நடக்க உள்ளது. இதில் தும்பி துள்ளல், புலியாட்டம், கரடியாட்டம் போன்றவை முக்கியத்துவம் வாய்ந்தவை.
ஓணத்தை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் உள்ள கல்லூரிகள் மற்றும் இளைஞர்கள் அமைப்புகள் சார்பில் அத்திப்பூ கோலப்போட்டி நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட உள்ளது. கேரளாவும் தமிழக எல்லையும் ஓண பண்டிகைக்காக களைகட்டத் தொடங்கியுள்ளது.