இலங்கைத் தமிழர் பிரச்சினையை விளக்கும் வம்ச வதம் நாடகம்!
நெல்லை: இலங்கை தமிழர் பிரச்சனைக்கான காரணங்களை பொதுமக்களுக்கு தெளிவு படுத்தும் வகையில் நெல்லையில் வம்சவதம் என்னும் தலைப்பில் தமிழ் நவீன நாடகம் நடக்க உள்ளது.
மூன்றாம் அரங்கு அமைப்பு சார்பில் இந்த நாடகம் அரங்கேற உள்ளது. பொதுமக்களுக்கு அனுமதி இலவசம்.
25ம் தேதி மாலை 6 மணிக்கு, நெல்லை சந்திப்பு ம.தி.தா இந்து மேல்நிலைப்பள்ளியில் இந்த நாடகம் நடைபெற உள்ளது. நெல்லை மேயர் ஏ.எல் பாலசுப்பிரமணியன் தலைமை வகிக்கிறார்.
பேராசிரியர் தொ.பரமசிவன் சிறப்புரையாற்றுகிறார். நாடக நிகழ்வுக்கான ஏற்பாடுகளை யாதுமாகி அமைப்பின் லேனாகுமார், முத்துகுமார் ஆகியோர் செய்து வருகின்றனர்.
இயக்குநர் கருணா பிரசாத்தி்ன் இயக்கத்தில் உருவான இந்த நாடகம் அண்மையில் படைப்பாளர்கள்,கவிஞர்கள் முன்னிலையில் சென்னையில் 20 நிமிடங்கள் நிகழ்த்தி காண்பிக்கப்பட்டது.
தற்போது பல மாற்றங்களுடன் முழு இசையமைப்புடன் 1 மணி நேர நிகழ்வாக முதன்முறையாக நெல்லையில் நிகழ்த்தி காண்பிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வழக்கமான அரங்க அமைப்பாக இல்லாமல் நாடகக் கலைஞர்கள், பொதுமக்கள் மத்தியில் தங்களது பாத்திரங்களை வெளிப்படுத்துவர் என்பது இந்த நாடகத்தின் தனிச்சிறப்பு.