தாய் மொழியை நேசியுங்கள் - மாணவர்களுக்கு வைரமுத்து அறிவுரை
கோவை: மாணவர்கள் தாய் மொழியை நேசிக்க வேண்டும் என கவிஞர் வைரமுத்து கூறினார்.
கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில், கல்லூரிகளுக்கு இடையிலான கலை விழாவை வெள்ளிக்கிழமை துவக்கி வைத்து வைரமுத்து பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், மக்களவை, சட்டப் பேரவையில் பெண்களுக்கு இடஒதுக்கீடு என்று நீண்ட காலமாகப் பேசப்பட்டு வருகிறது. இருப்பினும் சட்டம் கொண்டுவர முடியவில்லை. ஆனால், கல்லூரிகளில் இந்த இடஒதுக்கீடு சமஅளவில் இருக்கிறது. தற்போது உயர்கல்விக்கு வரும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அதேபோல, நகரங்களில் இருக்கும் கல்லூரிகளில் கிராமத்து மாணவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டும். அதுதான் கல்லூரிகளின் சாதனையாகவும், தர்மமாகவும் இருக்கும். நமக்கு உயிரையும், உடலையும் கொடுத்தது பெற்றோர்; அந்த உடலுக்கு அறிவை ஊட்டியது ஆசிரியர்கள். இவர்கள் இருவரையும் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.
கல்லூரிக் காலத்தில் மாணவர்களுக்கு ஒருவித ஈர்ப்பும், இனக் கவர்ச்சியும் ஏற்படும். இதை காதல் என நினைத்துவிடக் கூடாது. காதல் என்பது கெட்ட வார்த்தை அல்ல; இருபுறமும் பாய்ந்து வரும் நதியைப் போன்றதுதான் காதல். திரைப்பட காதலில் காமம்தான் உள்ளது.
ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு பதவி காத்திருக்கிறது. அதை தேர்வு செய்யும் இடம்தான் கல்லூரி. இன்றைய கல்லூரிப் பாடத் திட்டங்கள் தேர்வு சார்ந்ததாகவே இருக்கிறது. ஆகவே, பாடத் திட்டத்துக்கு அப்பாற்பட்ட விஷயங்களை மாணவர்கள் தெரிந்து கொள்வதோடு, பல்வேறு திறன்களை வளர்த்துக் கொள்வது அவசியம்.
உலகளவில் இருக்கும் போட்டியை எதிர்கொள்வதற்கு தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.
கணினி மோகத்தில் பலரும் தாய் மொழியை மறந்துவிடுகின்றனர். ஒவ்வொருவரின் வாழ்விலும் இறுதி வரை வருவது தாய் மொழிதான். பிறந்த நாட்டையும், தாய்மொழியையும் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.
இலங்கையில் தமிழர்கள் கடும் துன்பத்தை அனுபவித்து வருகின்றனர். அவர்களுக்காக, பலரும் தீக்குளித்து உயிரை விடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஏனென்றால் ஒவ்வொரு தமிழனின் உயிரும், இன்னொரு தமிழனைப் பாதுகாக்க உதவும் என்றார்.
கல்லூரி தலைவர் டி.எஸ்.ஆர்.கண்ணையன், செயலர் சரஸ்வதி கண்ணையன், முதல்வர் ஆர்.எஸ்.ராமசாமி உள்ளிட்டோர் பேசினர். பல்வேறு கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.












Click it and Unblock the Notifications