போராட்டம், தொடர் மழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு - ரூ.7 கோடி நஷ்டம்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கன மழை மற்றும் தொழிலாளர்களின் போராட்டங்கள் காரணமாக ரூ. 7 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்தப்படியாக பிரதான தொழிலாக உப்பு உற்பத்தி தொழில் விளங்கி வருகிறது. மாவட்டம் முழுவதும் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு 10 பெரிய உப்பு உற்பத்தியாளர்களும், 500க்கும் மேற்பட்ட சிறிய அளவிலான உப்பு உற்பத்தியாளர்களும் இத்தொழிலை செய்து வருகின்றனர். இதில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர்.
கடந்த 2 ஆண்டுகளாக பருவம் தவறி பெய்த மழையினால் உப்பு உற்பத்தியாளர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
கடந்த ஆண்டு மட்டும் 3 முறை மழை வெள்ளத்தால் உப்பளங்கள் அழிந்துள்ளன. இநநிலையில் இந்தாண்டு கடந்த மார்ச் 21ம் தேதி முதல் உப்பு தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு திடீரென போராட்டத்தில் குதித்தனர்.
சுமார் 20 நாள் நீடித்த இந்த போராட்டத்தினால் ரூ.3 கோடி அளவிலான உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது.
ஊதிய பிரச்சனை குறித்து இறுதி கட்டமாக நடந்த பேச்சுவார்த்தையில் ஆண்களுக்கு ரூ.156ம், பெண்களுக்கு ரூ.146ம் தருவதாக உப்பு உற்பத்தியாளர்கள் உறுதி அளித்ததை தொடர்ந்து உடன்பாடு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 11ம் தேதிதான் தொழிலாளர்கள் வேலைக்கு திரும்ப முடிவு செய்தனர்.
ஆனால் வேலைக்கு திரும்பிய முதல் நாளே வங்க கடலில் உருவாகிய புயல் சின்னத்தால் தென்மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.
இதில் கடற்கரையோர மாவட்டங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் 2 நாள் முழுவதும் இடைவிடாது மழை கொட்டி தீர்த்தது.
இந்த மழையினால் மாவட்டத்தில் உள்ள 20 ஆயிரம் ஏக்கர் உப்பளங்களும் தண்ணீரில் முழ்கியது. இதனால் மேலும் ரூ.3 கோடி இழப்பு ஏற்பட்டது. தற்போது பெய்துள்ள மழையினால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய இன்னும் 15 நாட்களுக்கு மேலாகும்.
கடந்த ஒரு மாதத்திற்குள் தொழிலாளர் வேலை நிறுத்தம், தொடர் மழை ஆகியவற்றினால் ரூ.7 கோடி வரையிலான உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உப்பு ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது.