லண்டனில் ஏலத்திற்கு வரும் காந்தி, நேரு கடிதங்கள், காதி உடை, தபால் கார்டுகள்
லண்டன்: மகாத்மா காந்தி மற்றும் ஜவஹர்லால் நேரு ஆகியோர் எழுதிய கடிதங்கள், காந்தி தனது கையால் நூற்ற பருத்தி ஆடை உள்ளிட்ட பல அரிய பொருட்கள் லண்டனில் உள்ள கிறிஸ்டி ஏல மையத்தில் ஜூலை 14ம் தேதி ஏலத்திற்கு வரவுள்ளன.
கிலாபத் இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரும், இஸ்லாமிய அறிஞருமான மெளலானா அப்துல் பாரிக்கு, காந்தி தனது கைப்பட உருதில் எழுதிய மூன்று கடிதங்களுக்கு ரூ. 1.99 முதல் ரூ. 2.38 லட்சம் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்து, முஸ்லீம் உறவு குறித்தும், லக்னோவில் நடைபெற்ற மதக் கலவரம் குறித்தும், தங்களது தனிப்பட்ட நட்பு குறித்தும் அதில் காந்தியடிகள் எழுதியுள்ளார்.
ஒரு கடிதத்தை காந்தி சிறையிலிருந்து அனுப்பியுள்ளார். மேலும், உடை தயாரிப்பதற்காக தனக்கு பருத்தித் துணியை அனுப்பியதற்கும் இக்கடிதங்களில் நன்றி தெரிவித்துள்ளார் காந்தி.
அதேபோல காந்தியடிகள் தனது கையால் நூற்ற காதி உடை, அதில் அவரது கையெழுத்து இடம் பெற்றுள்ளது. இதுவும் ஏலத்திற்கு வருகிறது. இதற்கு ரூ. 1.59 லட்சம் முதல் ரூ. 1.99 லட்சம் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த உடையை, தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த நடிகை மோய்ரா லிஸ்டருக்கு காந்தியடிகள் பரிசாக அளித்துள்ளார். மோய்ரா, ஜெய்ப்பூர் மகாராணி காயத்ரி தேவியின் தோழி ஆவார்.
இதுதவிர உருதுக் கவிஞர் ஹமீத் உல்லா அப்சருக்கு உருதில் காந்தியடிகள் கையெழுத்திட்ட இரண்டு தபால் அட்டைகள் ரூ. 1.19 முதல் ரூ. 1.59 லட்சம் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, நேரு, தனக்கு வேண்டிய மிருதுளா சாராபாய்க்கு எழுதிய கடிதங்கள் உட்பட, 29 கடிதங்கள் ஏலம் விடப்பட உள்ளன.
காஷ்மீர் விவகாரம், கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிப்பது, டெல்லியில் வீடு இல்லாமல் தவிக்கும் குழந்தைகள் உள்ளிட்டவை குறித்து சாராபாய்க்கு நேரு கடிதம் எழுதியுள்ளார்.
1953ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி, காஷ்மீரில் ஷேக் அப்துல்லா ஆட்சியை டிஸ்மிஸ் செய்த பின், நேரு எழுதிய உணர்ச்சிகரமான கடிதமும் ஏல சுத்தியலுக்கு கீழ் வந்துள்ளது.