ஒரு வாரத்திற்கு பின் குற்றாலத்தில் மீண்டும் சூடு பிடிக்கும் சீசன்
குற்றாலம்: குற்றாலத்தில் ஒரு வாரத்திற்கு பிறகு நேற்று லேசான சாரல் மழை பெய்தது. இதனால் அங்கு சற்று இதமான சூழல் நிலவுகிறது.
குற்றாலத்தில் கடந்த ஒரு வாரமாக சாரல் இல்லாததுடன் நல்ல வெயிலும் காணப்பட்டது. இதனால் அருவிகளில் தண்ணீர் வரத்து மிகவும் குறைந்தது. இந்நிலையில் நேற்று பகல் முழுவதும் வெயில் இல்லை. தென்றல் காற்றும் இதமாக வீசியது.
மேற்கு தொடர்ச்சி மலையில் அவ்வப்போது மேக கூட்டம் திரண்டு காணப்பட்டது. இதையடுத்து அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்தது. இதனால் அங்கு இதமான சூழல் நிலவியது. சாரல் மழை பெய்த போதிலும் மெயினருவியில் தண்ணீர் நூலிழை போன்று விழுந்தது.
ஐந்தருவியில் மூன்று பிரிவுகளில் தண்ணீர் குறைவாக கொட்டுகிறது. பழைய குற்றாலத்திலும் அருவிகளில் தண்ணீர் குறைவாகவே கொட்டுகிறது. இருந்த போதிலும் சுற்றுலா பயணிகள் கூட்டத்திற்கு குறைவில்லை. இதனால் அனைத்து அருவிகளிலும் மக்கள் பகலில் மட்டுமில்லாது இரவிலும் வரிசையில் நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர். நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை லேசான சாரல் மழை பெய்தது.