சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள்: 25 நாட்களில் ரூ. 53 கோடிக்கு மேல் வசூல்
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. மண்டல கால பூஜை தொடங்கி 25 நாட்களில் ரூ. 53 கோடிக்கு மேல் வசூல் ஆகியுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல கால பூஜைக்கு நடை திறக்கப்பட்ட நாளில் இருந்து பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது. வழக்கமாக சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் தான் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு எல்லா நாட்களிலுமே கூட்டம் அலைமோதுகிறது. இதனால் கோயில் வருமானம் அதிகரித்துள்ளது. நடை திறந்த 25 நாட்களில் வருவாய் ரூ. 53 கோடியை தாண்டியுள்ளது.
கடந்த இரண்டு தினங்களாக பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினமும், நேற்றும் பக்தர்கள் பம்பையில் பல மணி நேரம் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்கள் சிறு சிறு குழுக்களாக சன்னிதானத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
நேற்று காலை 6 மணிக்கு பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு புறப்பட்ட பக்தர்களால் மாலை 4 மணிக்கு பிறகுதான் தரிசனம் செய்ய முடிந்தது. நெய் அபிஷேகத்துக்கும் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்தனர்.