32 சிறந்த நூலகர்களுக்கு நல் நூலகர் விருது- அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்
சென்னை: பள்ளிக் கல்வித் துறையின் பொது நூலக இயக்ககம் சார்பில், 32 சிறந்த நூலகர்களுக்கு நல் நூலகர் விருதை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவப்நேயப்பாவாணர் மாவட்ட மைய நூலகத்தில் நல் நூலகர் விருது வழங்கும் விழா நேற்று நடந்தது. பள்ளி கல்வித் துறையின் கீழ் இயங்கும் பொது நூலக இயக்ககம் இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தது. ஆசிரியர் பயிற்சி கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனர் கு.தேவராஜன் தலைமை தாங்கினார். பொது நூலக இயக்குனர் ச.அன்பழகன் வரவேற்றார்.
பள்ளி கல்வித் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், மாநிலம் முழுவதும் உள்ள நூலகங்களில் பணிபுரியும் 32 சிறந்த நூலகர்களுக்கு நல் நூலகர் விருதையும், ரூ.2,000 பரிசுத் தொகையையும் வழங்கினார்.
நல் நூலகர் விருது பெற்றவர்கள் விவரம்:
அரியலூர்- ச.அம்பேத்கர்,
சென்னை- சி.ஆ.மோகனரங்கம், எம்.முரளி,
கோவை-ச.சரவணன், க.கலைமொழி,
கடலூர்-பி.ரகுநந்தனன்,
திண்டுக்கல்-எஸ்.சுசீலா,
ஈரோடு-ஆர்.லோகநாதன்,
காஞ்சிபுரம்-கு.தாமோதரன்,
கரூர்-ரா.ச.சுகன்யா,
நீலகிரி-எஸ்.கோபால்,
புதுக்கோட்டை-பா.ராமகிருஷ்ணன்,
ராமநாதபுரம்-நா.காசிநாதன்,
சேலம்-கே.மகேஸ்வரி, கே.வடிவேலு,
சிவகங்கை- எஸ்.லலிதா,
தஞ்சை-கி.பிரியா,
தேனி-பெ.வடிவேல்,
திருவண்ணாமலை-இரா.சுந்தரேசன், த.வெங்கடசேன்,
திருவள்ளூர்-தி.பு.சம்பத்,
திருவாரூர்-த.செல்வக்குமார், வி.கவிதா,
தூத்துக்குடி-கோ.சுமித்ரா,
திருச்சி-மு.மோகன்-, மா.செல்வகுமார்,
திருநெல்வேலி-மு.வெற்றிவேலன்,
வேலூர்-ஏ.கணேசன்,
விருதுநகர்-கு.திருஞானசம்பந்தம்,
விழுப்புரம்-மு.அன்பழகன், நா.சரஸ்வதி,
சென்னை கன்னிமாரா நூலகம்-அ.சுந்தரம்.
இந்த விழாவில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதாவது,
1910ம் ஆண்டு பரோடா மன்னர் 2ம் கெய்க்வாட் ஆங்கிலேய நூலக வல்லுனர்களின் ஆலோசனையின் பேரில் இந்தியாவில் முறையான நூலகங்களை துவக்கினார். அதன்பிறகு 1919ம் ஆண்டு சென்னை பிராட்வேயில் உள்ள கோகலே ஹாலில் அகில இந்திய நூலக ஆர்வலர்களின் மாநாடு நடந்தது.
1932ம் ஆண்டு அகில இந்திய அளவில் இந்திய நூலக சங்கம் ஏற்படுத்தப்பட்டது. அந்த சங்கத்தின் முதல் செயலாளராக எஸ்.ஆர்.அரங்கநாதன் நியமிக்கப்பட்டார். தமிழகத்தை சேர்ந்த எஸ்.ஆர்.அரங்கநாதனின் முயற்சியால் கடந்த 1948ம் ஆண்டு தமிழகத்தில் முதல் முதலாக பொது நூலக சட்டம் இயற்றப்பட்டு 2 ஆண்டுகளில் அந்த சட்டம் நடைமுறைக்கு வந்தது.
தமிழகத்தில் இப்போது ஊர்ப்புற நூலகங்கள் 1795, கிளை நூலகங்கள் 1664, நடமாடும் நூலகங்கள் 10, பகுதி நேர நூலகங்கள் 539, மாவட்ட நூலகங்கள் 32, மாநில மத்திய நூலகம் 1 என்று மாநிலம் முழுவதும் மொத்தம் 4,041 நூலகங்கள் உள்ளன.
முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின்படி, பொது நூலகங்களுக்கு ரூ.25 கோடிக்கு புத்தகம் வாங்கவும், ரூ.25 கோடிக்கு புதிய நூலக கட்டிடங்கள் கட்டவும், ரூ.10 கோடி செலவில் கட்டிட பராமரிப்பு பணிகள் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. மேலும் நூலகங்களை டிஜிட்டல் தரத்துக்கு மாற்றும் பணிகளும் நடந்து வருகின்றது.
மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலம் மூலம், மாவட்ட நூலகங்களில் 1093 ஊர்ப்புற நூலகர் பணியிடங்களை பூர்த்தி செய்யவும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஊர்ப்புற நூலகர்களுக்கு பதவி உயர்வு வழங்கி, 260 மூன்றாம் நிலை நூலகர் பணியிடங்களை பூர்த்தி செய்யவும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது, என்றார்.