சிதையும் இந்திய கலாச்சாரத்தை காப்பாற்றுக: ஜயேந்திரர் வலியுறுத்தல்
சென்னை: கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்து கொண்டிருக்கும் இந்திய கலாசாரத்தை காப்பாற்றுவது நம் கடமை என்று ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறினார்.
நேற்று சென்னையில் தமிழக தேசிய ஆன்மிக மக்கள் கட்சியின் தொடக்க விழா நடந்தது. கட்சியை துவக்கி வைத்து ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பேசியதாவது,
இந்தியா ஒரு பழம்பெரும் நாடு. இங்கு பல்வேறு இன, மதத்தைச் சேர்ந்தவர்கள் வாழ்கின்றனர். இந்தியா பல மதத்தவர்களின் தாயகமாக விளங்குகிறது. இதனால் இங்குள்ள இந்துக்களின் கலாசாரப் பெருமை குன்றத் துவங்கியுள்ளது.
ஒரு நாட்டு மக்களின் ஒழுக்கத்துக்கு அடிப்படையாக விளங்குவது அந்நாட்டின் கலாசாரம் மட்டும் தான். இந்திய மக்களின் பழங்கால இந்து மத கலாசாரத்தையும், பண்பாட்டையும் காப்பாற்றும் ஒரு முயற்சியாக இந்த புதிய கட்சி தொடங்கப்பட்டுள்ளது.
சிதறிக் கிடக்கும் இந்து அமைப்புகளை இக்கட்சி ஒன்றிணைக்கும். இந்துக்கள் மட்டுமின்றி இந்து மதக் கொள்கைகளின் மீது மரியாதை உடைய வேறு மதத்தவர்களோடும் இணைந்து செயலாற்றும் வகையில் மதச்சார்பற்ற இயக்கமாகவே இக்கட்சி விளங்கும்.
கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்து கொண்டிருக்கும் இந்திய கலாச்சாரத்தை காப்பாற்றுவது நம் கடமை. அந்த உயர்ந்த நோக்கத்துடன் மக்கள் இந்த கட்சியில் சேர்ந்து தேசத் தொண்டாற்ற வேண்டும் என்றார்.
இந்த விழாவில் பாஜக எம்.பி. மேனகா காந்தி, பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல. கணேசன், அகில இந்திய இமாம் தலைவர் இலியாஸ், தமிழக தேசிய ஆன்மிக மக்கள் கட்சியின் தலைவர் பா. ரவிச்சந்திரன், மாநில செயலாளர் சஞ்சேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.