பசுமை வீடுகள் திட்டம்-20ம் தேதி காஞ்சியில் தொடங்கி வைக்கிறார் ஜெ.
சென்னை: காஞ்சிபுரத்தில் புதிய தொழில் நுட்பத்தில் கட்டப்பட்டுள்ள பசுமை வீடுகளை வரும் 20-ம் தேதி முதலமைச்சர் ஜெயலலிதா தொடக்கி வைக்கிறார். இதற்கான பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
சட்டமன்ற தேர்தலின் போது தமிழகத்தில் சூரிய ஒளி மின்சார வசதியுடன் கூடிய பசுமை வீடுகள் அமைக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் ஜெயலலிதா அறிவித்திருந்தார். இதனை நிறைவேற்றும் வகையில் தமிழகம் முழுவதும் 60 ஆயிரம் பசுமை வீடுகள் கட்ட ரூ.1080 கோடி பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டது.
பூகம்பத்தால் பாதிக்கப்படாது
இந்த வீடுகளுக்கு அடித்தளத்தில் மட்டும் சிமெண்ட், செங்கற்கள் பயன்படுத்தப்படும். பக்கவாட்டு சுவர்கள் பைபர் தொழில் நுட்பத்துடன் அமைக்கப்படுகிறது. இந்த சுவர் எடை குறைந்தது என்பதால் சூறாவளி மற்றும் நில நடுக்கம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டாலும் அதில் வசிப்பவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
30 டிகிரி சென்டிகிரேட் முதல் 80 டிகிரி சென்டி கிரேட் வரை இந்த வீடு வெப்பத்தை தாங்கும். தெர்மோகோலில் உள்ளது போன்ற பொருட்கள் இந்த பைபரில் சேர்க்கப்பட்டுள்ளதால் வெப்பம், குளிர் போன்ற பல்வேறு சூழ்நிலைகளையும் தாங்க கூடியதாக இருக்கும்.
ஜெர்மன் நாட்டு தொழில்நுட்பம்
சோதனை முறையில் இந்த வீடுகளை காஞ்சீபுரம் அருகே பாலுசெட்டி சத்திரம் பகுதியில் கட்டி உள்ளனர். ஜெர்மன் நாட்டு தொழில் நுட்பத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த வீடுகளில் ஒரு ஹால் மற்றும் சமையலறை, கழிவறை வசதி உள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் சோலார் அமைப்புகளும் பொறுத்தப்பட்டுள்ளது.
7 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு குடியேறுவதற்கு தயார் நிலையில் உள்ளதால் வரும் 20 ம் தேதி முதலமைச்சர் ஜெயலலிதா இதனை தொடக்கிவைக்கிறார். விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.