இளைஞர்களே உஷார்: வேலை பளுவால் உங்களை குறிவைக்கும் பக்கவாதம்
டெல்லி: வாழ்க்கை முறை, அதிகரித்து வரும் வேலை பளு ஆகியவற்றால் 20 முதல் 30 வயது வரை உள்ளவர்களுக்கு அதிக அளவில் மூளையில் ரத்த கசிவு ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மாறிவிட்ட வாழ்க்கை முறை, அதிகரித்து வரும் வேலை பளு, வாழ்க்கையில் முன்னேறியே ஆக வேண்டும் என்ற லட்சியம் ஆகியவற்றால் இளம் வயதினரின் உடல் நலம் பெரிதும் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். முன்பெல்லாம் பக்கவாதம் என்பது உயர் ரத்த அழுத்தம், சக்கரை வியாதி உள்ள வயதானவர்களுக்கு வந்தது. ஆனால் தற்போது அது இளைஞர்களுக்கு வருகிறது என்று சப்தர்ஜங் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் கே.பி. ஷங்கர் தெரிவித்துள்ளார்.
வாழ்க்கை முறை
நமது வாழ்க்கை முறையால் இளம் தலைமுறையினருக்கு அதிக அளவில் மூளையில் ரத்த கசிவு ஏற்படுவதாக மருத்துவர் ஷங்கர் தெரிவித்தார்.
பக்கவாதம்
இந்தியாவில் ஆண்டுதோறும் லட்சத்தில் 100 முதல் 150 பேருக்கு பக்கவாதம் ஏற்படுகிறதாம். அதில் 15 முதல் 20 சதவீதம் வரை பாதிக்கப்படுபவர்கள் 30 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் தான் என்று ஷங்கர் கூறினார்.
மூளையில் அடைப்பு, பக்கவாதம்
மன அழுத்தம், வேலை பளு, போட்டி சூழல், ஒழுங்காக தூங்காமல் இருத்தல், கண்ட நேரத்தில் அதுவும் சரியாக சாப்பிடாமல் இருத்தல், உடற்பயிற்சி செய்யாமல் இருத்தல் உள்ளிட்டவற்றால் இளைஞர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை வியாதி ஏற்படுகிறது. ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதியால் மூளை பக்கவாதம் ஏற்படுகிறது.
உயர் ரத்த அழுத்தம் தான்
மூளையில் ரத்த கசிவு ஏற்பட உயர் ரத்த அழுத்தம் தான் முக்கிய காரணம் என்று ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை மருத்துவர் விகாஸ் திகாவ் தெரிவித்தார்.
வெடிகுண்டு
தங்களுக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பதே பலருக்கு தெரியாமல் உள்ளது. அவர்களுக்கு தங்கள் உடலுக்குள் எந்த நேரத்திலும் வெடிக்கும் நிலையில் ஒரு வெடிகுண்டு உள்ளது என்பது தெரிவதில்லை என்றார் விகாஸ்.
சைலன்ட் கில்லர்
உயர் ரத்த அழுத்தம் என்பது சத்தமில்லாமல் நம்மை கொன்றுவிடுமாம். அதை தவிர்க்க உங்களால் முடிந்தவற்றை மட்டுமே கையாள வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.