குழந்தையென்று ஓடி சென்று அப்பாவின் கன்னத்தில் ஈரம் பதிய முத்தமிட்டு!
சார்லேட்: வருடத்தின் 365 நாட்களிலும் கொண்டாடப்பட வேண்டியவர் அப்பா என்றாலும் கூட நாம் கொண்டாடியதில்லை. அவர் கோபக்காரர் , கண்டிப்பா இருப்பாரு , எப்போ பார்த்தாலும் திட்டிகிட்டு இருப்பார். இவன்லாம் எங்க உருப்பட போறான் என்று திட்டுகிற அப்பாக்கள் ஒரு ரகம்.பல வீடுகளில் முன்பெல்லாம் இந்த நிலைமை தான்.ஏன் இப்போது கூட இருக்கலாம்.
அப்பாவுக்கு நம்ம மேல பாசமே கிடையாது என்று நாம் நிச்சயமா நினைத்த மாதிரி பாசத்தை வெளிக்காட்ட தெரியாமல் கோபத்தை மட்டும் கொட்டி தீர்த்து வளர்த்த தலைமுறை இப்போது கொஞ்சம் குறைவு தான். ஆனால் அன்று எல்லாம் அப்பாவின் செருப்பு சத்தத்திற்கு தனி மரியாதை உண்டு. அப்பாவின் செருப்பு சத்தத்தில் தொலைக்காட்சி அணைக்கப்பட்டு அந்த கால பிள்ளைகள் முகங்கள் புத்தகத்தில் புதைந்து போயிருக்கும்.
குறும்பா நீ தான் என் உலகம் :
ஆனால் கால மாற்றம் இன்றய அப்பாக்கள் எல்லாம் குறும்பா நீ தான் என் உலகம் என்று கொஞ்சி இன்னொரு முகம் காட்டுகிறார்கள். குழந்தையோடு குழந்தையாதல் ஒரு சுகம் தான். அந்த கால அப்பாக்கள் எப்போதும் இரண்டு அடி மேல நின்று நாங்க கீழே நின்று ஒரு இடைவெளியோடு கொஞ்சம் பயம் அதிக மரியாதையோடு வளர்க்கப்பட்ட தலைமுறை என்பதால் என்னவோ இப்போது அம்மக்கள் எல்லாம் எப்போதும் இப்போது குழந்தையின் தந்தையிடம் நீங்க நம் குழந்தைகளுக்கு நல்ல பிரண்டா தான் இருக்கணும் என்று அடிக்கடி நினைவுபடுத்திக்கொள்கிறார்கள். சரியோ தப்போ இந்த தலைமுறைக்கும் அதுவே சரி. மகனோடு தோழனாகும் அப்பாக்களை எப்போதும் தலை வணங்குவேன். நேசிக்கிறேன்.
மகள்களை அம்மாவாக பார்த்து:
அதைவிட ஒரு படி மேல போய் தன மகள்களை கொஞ்சி அவர்கள் மிஞ்சி போகும் போது கூட பொறுமையாய் ரசிக்கும் தந்தைகள் வெகு அழகு. தன் மகள்களை அம்மாவாக பார்த்து பூரிக்கும் தந்தை அழகு. எதற்கும் கலங்கி பார்க்காத தந்தையின் முகத்தில் முதல் துளி கண்ணீரை பார்க்கும் நாள் நிச்சயமாக இதுவாக தான் இருக்கும். அது தன் மகளின் திருமண இரவில் அவர் தன் அருமை மகளுக்கு விடைகொடுத்து வாகனத்தில் ஏறிய பின்னோ கூட்டத்தின் நடுவிலோ கூச்சம் மறந்து கண் கலங்க அதை மறைத்து அதை கட்டுப்படுத்தி முகம் திருப்பி சமாளிக்கும் அந்த நொடி அப்பா என்ற மனிதன் புனிதனாய் தெரிகிறான்.
அப்பாக்கள் எப்போதும் அழகு
அப்பாக்கள் எப்போதும் அழகு. நண்பனா தோள் சாய்கிற அப்பவாக இருந்தாலும் வெளியே ரொம்ப இறுக்கமாக , கண்டிப்பாக தெரிந்தாலும் அப்பாவாக மிடுக்கு காட்டினாலும் கூட அப்பா அப்பா தான். அப்பா என்ற சொந்தத்தை அது தரும் பாடத்தை இந்த வாழ்க்கையில் நாம் சந்திக்கும் எந்த மனிதரும் தந்து விடப் போவதில்லை. அந்த சொந்தத்தின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.
ஒவ்வொரு அப்பாவின் வாழ்க்கையும் ஒரு சரித்திரம். அது ஏனோ அவர்கள் வாழும் போது நமக்கு தெரிவதில்லை . அப்பாக்கள் தின வாழ்த்துக்களோடு உங்களுக்கு எத்தனை வயசு என்றாலும் கூட ஒரு குழந்தையென்று ஓடி சென்று உங்கள் அப்பாவின் கன்னத்தில் ஈரம் பதிய முத்தமிட்டு அவர் தோளில் சாய்ந்துகொண்டு சொல்லுங்கள் அப்பா நீ சூப்பர் பா என்று.
- Inkpena சஹாயா