காலம் கடந்து கிடைக்கும் பலாக் கனியைக் காட்டிலும் கையிலிருக்கும் கலாக்கனி மேல்!
-லதா சரவணன்
உற்சாகமான வணக்கங்கள் ! சில வாரங்களுக்கு உங்களுடன் நான் பயணிக்கப் போகிறேன், வரவேற்பீர்கள் என்ற நம்பிக்கையில்!
போகும் போது என்னை ரசித்துக்கொண்டே போ, நீ திரும்பி வரும்போது நான் இருக்கமாட்டேன் என்று வாழ்க்கை மனிதனைப் பார்த்துக் கூறுவதைப் போல ஒரு வாசகம். வாழ்க்கையின் ஆணிவேர், நம்பிக்கை.
அன்னையின் கருவில் இருந்து அழியாமல் பிறப்போம் என்பதே பிள்ளையின் நம்பிக்கைதானே நாம் பிறக்கும் முன்னரே நமக்கும் முன்பாக வழிநடத்தும் வாசலே நம்பிக்கைதான்.
கடவுள் தன் முன் விளையாடிய தேவதைகளை கண்டு நீ இனிமேல் மனிதப் பிறப்பாக பூமியினை அடையப் போகிறாய் என்று கூறினார். அச்சிறுபிள்ளை இறைவா, நான் இங்கே உன் அருகே இருந்து சுகம் கண்டுவிட்டேன். இப்போது உன் பிள்ளையாகிய என்னை எங்கோ தொலைதூரத்தில் திரும்பி வர இயலாத இடத்திற்கு அனுப்புகிறாயே? அங்கே எனக்காக யார் இருப்பார்கள்? என்று அழுதது.
தேவதையே நீ கவலை கொள்ளாதே எனக்கு பதிலாக உன்னை கவனித்துக்கொள்ள அங்கே ஒரு ஜீவன் இருக்கும் உன் அழுகை, பசி, தாகம், சிரிப்பு, தேவைகள் எல்லாவற்றையும் நீ வாய்திறந்து சொல்வதற்கு முன்பே புரிந்து கொள்ளும் என்று நம்பிக்கை வார்த்தை சொல்லி அனுப்பி வைத்தார் கடவுள். அப்படி பிறக்கும் போதே யாரோ ஒரு தேவதையான அன்னையிடம் நம்பிக்கையோடுதான் பிறக்கிறோம். இறக்கும் தருவாய் வரையில் யாரோ ஒருவரின் நம்பிக்கைக்கு பாத்திரமாகி இருந்து வருகிறோம். என் பிள்ளை சமுதாயத்தில் நல்லவனாய் வளருவான் என்ற பெற்றோரின் நம்பிக்கையை ! மாணவனாய் பள்ளியின், ஆசிரியரின் நம்பிக்கையைச் சுமந்துகொண்டு, சகோதரனாய் உடன்பிறந்தோரிடம், காதலாய் இருபாலாரில் ஒருவருக்கொருவருக்காகவும், திருமணம் என்னும் பந்தத்தில் பிணையும் போது, அன்பும், காமமும், நம்பிக்கையும் இணைந்த உறவின் பாலமாய் பிரதான நம்பிக்கையோடு, பெற்ற பிள்ளை நலம் சிறக்கும் என்ற நம்பிக்கை, இப்படி ஒவ்வொரு கட்டத்திலும் நம்பிக்கை என்ற ஒற்றனின் பிணைப்பு நம்மையும் அறியாமல் ஒட்டிக்கொண்டு விடுகிறது.
பந்தயக் குதிரையாகி தொடரப்படும் வாழ்க்கையில் ! ஒருவரையொருவர் மிஞ்சவே ஒடுகிறோம். உடல் நலம், மனநலம், உறவுகள் நலம் என எதையுமே நினையாமல் நம்மை யாரும் பந்தயத்தில் முந்திவிடக் கூடாது என்று இறக்கைக் கட்டிக்கொண்டு பறக்கிறோம் ! காற்றைப் போல் களத்தினைக் கடக்கிறோம். களத்தின் பாதியில் நம்மை இன்பம், துன்பம், கோபம், குரோதம், பொறாமை, பழியுணர்ச்சி என்று அநேகத் தடைகள் வாலைச் சுருட்டிக்கொண்டு இரைதேடும் நாகமாய் அதன் பெருமூச்சியில் நம் நம்பிக்கைகள் இறையாகிப்போகின்றது.
இந்த நம்பிக்கைதான் முதுகெலும்பாய் மாறி நம்மை வழிநடத்திச் செல்கிறது என்பதை அறிந்து கொள்ளாமல் நாம் தான் எத்தனை தடவைகள் முட்டாளைப் போல் இந்த பாம்பிற்குள்ளேயே ஒளிந்து கொள்கிறோம். ஏழுவகைச் சுவைகளில் சந்தோஷத்தை அடையவே போராடுகிறோம்... நம்பிக்கையோடு கூடிய சந்தோஷம் பாதிபலம் அல்லவா? நம்மை நகர்த்திக்கொள்ள தேவைப்படும் உணர்வு ஏதாவது ஒரு புள்ளியில் இருந்துதானே துவங்குகிறது. எதிலெல்லாம் சந்தோஷம்? ஆன்மாவில் இருந்து வெளியே துரத்தப்படும் ஒவ்வொரு உணர்வுமே அதற்குரிய காரணங்களைத் தேடிச் செல்வதுண்டு, நம்மூர் பக்கம் ஒரு சொல்லாடல் சொல்லுவார்கள். காலம் கடந்து கிடைக்கும் பலாக்கனியைக் காட்டிலும் கையிலிருக்கும் கலாக்கனி மேலானது என்று!
(தொடர்ந்து பேசுவேன்)