துபாய் ஈமான் அமைப்பின் இஃப்தார் நிகழ்ச்சியில் இந்திய தூதர் பங்கேற்பு
துபாய்: துபாய் ஈமான் அமைப்பின் இஃப்தார் நிகழ்ச்சியில் இந்திய தூதர் டி.பி. சீத்தாராமன் கலந்து கொண்டார்.
துபாய் ஈமான் அமைப்பு தேரா லூத்தா ஜாமிஆ மஸ்ஜிதில் தினமும் 4 ஆயிரம் பேருக்கு மேல் பங்கேற்கும் இஃப்தார் நிகழ்ச்சியில் தமிழகத்து நோன்புக் கஞ்சி உள்ளிட்ட உணவுப் பொருட்களை வழங்கி வருகிறது. இதில் பல்வேறு நாட்டவரும் பங்கேற்று வருகின்றனர்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு அமீரகத்துக்கான இந்திய தூதர் டி.பி. சீத்தாராமனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஈமான் அழைப்பினை ஏற்றுக்கொண்ட அவர் 20.07.2014 அன்று நடந்த இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அவரை ஈமான் அமைப்பின் துணைத் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லா, பொதுச் செயலாளர் குத்தாலம் ஏ லியாக்கத் அலி, துணைப் பொதுச் செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, ஊடகத்துறை மற்றும் மக்கள் தொடர்பு செயலாளர் முதுவை ஹிதாயத் உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்றனர்.
ஈமான் அமைப்பு மேற்கொண்டு வரும் சமூக மேம்பாட்டுப் பணிகளையும், இஃப்தார் நிகழ்ச்சியையும் பாராட்டினார் இந்திய தூதர். மேலும் அமீரகத்தில் தமிழக நோன்புக் கஞ்சியினை சுவையுடன் வழங்கி வருவதற்கும் பெருமிதம் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் காயிதே மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளர் எம். அப்துல் ரஹ்மான், சமூக சேவகி ஜெயந்தி மாலா சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.