மீண்டும் பாடுமா மீன்?
அமைதியாக
அலையடித்துக் கொண்டிருந்த
சிறுகுளத்தில்
ஓர் காலம்
மீன்கள் பாடினவாம்.
மட்டு நகர் வாவியழகும்,
மாமாங்கக் கோவிலழகும்,
கொட்டோ கொட்டெனக்
கொட்டிக்கிடக்கும்
நெல்வயல்களின்
நிறை மணியழகும்.
கொக்கட்டி மரங்களின்
கொப்பரில் தூங்கும்
தேன் வதைகள் அழகும்,
வெட்டி எடுக்கையில்
குத்தி விட்டுப்போகும்
தேனீக்களின் பேரழகும்.
மட்டுநகர் வாவியின்
மீன்கள் பாடினவாம்.
மீன் பாடும் தேனாடென்று
புலவர்கள் பாடினராம்!
தமிழையும் வீரத்தையும்
தாலாட்டில் கலந்தூட்டி
பிள்ளைகளை வளர்த்த
பெற்றோரைப் பாடினவாம்.
சுற்றமும் நட்பும்
சூழ வாழ்ந்திருந்து
நெற்றி வியர்வைகளை
நெல்மணியாக்கிய
மக்களைப் பாடினவாம்.
பெளர்ணமி நாட்களில்
பகலவன் தாழ்ந்த பின்னர்
கடலரசன் பாட்டுக்கு
வாவி மகள் ஆடினாளாம்.
யாரின் சாபமோ
யார் செய்த பாவமோ
ஊரே ஒரு பொழுதில்
ஓய்ந்து போனதே!
சோறுடன் தமிழுணர்வை
பிசைந்தூட்டி வளர்த்தவர்கள்
கசிந்த விழியோரம்
காய்ந்து கிடக்கிறதே!
விதைக்காலமே காத்திருக்கும்
விளைநிலங்கள்,
துப்பாக்கிச் சன்னத்தால்
துளையுண்ட தேன் கூடுகள்,
இரையாத கடல்,
ஆடாத வாவி,
சோகப் பெருமூச்சில்
நெட்டுயிருக்கும்
மக்கள்
அவர்களுடன் நானும்
கேட்கும் ஒரே கேள்வி!
மீண்டும் பாடுமா
மீன்?












Click it and Unblock the Notifications