கடலுக்கு ஒரு கடிதம்- கோவி.கண்ணன்
கடல் தாயே! என்றழைத்த எங்களுக்கு
இதுதான் உன் அசுர அணைப்பா?
உப்புக்கு உன்னிடம் பஞ்சமா?
எங்கள் கண்ணீரையும் சேர்த்தெடுத்து சென்றாய்!
கொடுவாய் மீன் தெரியும்!
உன் சுனாமி கொடுவாய் தெரியாது!
வஞ்சிரமீனுக்கு வலை வீசத் தெரிந்த நாங்கள்
உன் வஞ்சக அலையின் விலை தெரிந்திருக்கவில்லை!
உன்னில் செம்மீன் பிடித்த எம்மக்களை
விண்மீன் பிடிக்கவா விண்ணுக்கழைத்தாய்?
உன் கரையில்
மீன்களை உலர்த்தியதற்காகவா
இன்று எங்களை உலர்த்திவிட்டாய்?
இலங்கை கேட்கிறது.
இன்னும் எந்த இராவணனுக்காக
இப்படியொரு படையெடுப்பு?
செந்தமிழகம்
வெந்த தமிழகமானது!
மாலத்தீவு மரண ஓலத்தீவானது!
நாகப்பட்டினம்
உன்னால் சோகப்பட்டினமானது!
அழகு அந்தமான்
அலங்கோலமானது!
உணவுக்கும்
உப்புக்கும்
எங்கள் உயிர், உறவுகள், உடைமைகள்?
உன் விலை ரொம்பவும் அதிகம்!
அழிந்துவிட்டோம் என்று எண்ணாதே!
மீண்டும் எழுவோம்!
இப்புத்தாண்டில் உன் அலைகளைப்போல
பன்மடங்கு!












Click it and Unblock the Notifications