ஆயாசம்- பிரபு
படிக்கட்டில் விரைகையில்
மிஞ்சிய காலு-டன்
ரத்தச் சகதியாய்
தரையோடு தவழ்ந்து படர்ந்த
உடலிலிருந்து தலையுயர்த்தும்பிச்சைக்காரன்
வெடித்த மாதுளம்பழமாக
சிந்திச் சிதறும்
கூட்டத்தோடு வந்து நிற்கும் ரயில்
இருக்கையிலமர்ந்தவர்
எழப்போகிறாரா
என்பதையறியும்
கண்கள், உடலசைவுகளின் மொழிகளைப்
படிக்கும் மனப்பயிற்சி
அடுத்தவரின் இடுப்பில்
முழங்கை முட்டி கொண்டழுத்தி
கிடைத்த இடைவெளியில்
முந்திச் சென்று
இருக்கையில் அமரும்
உடல் வலிமை
சிவப்பு எச்சிற்கறை படர்ந்த
கம்பி தடுத்த சாரளம் வழியே
விரைந்து கடக்கும்,
மறைவின்றி
அத்தியாவசிய தேவை கழிக்கும்
ஏழை மனிதர்கள்,
பாலத்தடியில்
மிஞ்சிய உடல்பலமனைத்தையும் திரட்டி
போதைப் புகையிழுக்கும்நடைப்பிணங்கள்,
பல வண்ணக் குப்பைகள்,
கறுப்பு ஓடைகள்,
அதில்
துணி துவைக்கும், கீரை வளர்க்கும்
அழுக்கு சீலைப் பெண்கள்,
சோம்பித்திரியும்
எதிர்காலத்தைத் தொலைத்த
குழந்தைகள்....
மீண்டும்
ரயில்நிலையப் படிக்கட்டில்
முழங்கைக்கு மேல்
எதுவுமில்லா
குச்சிக் கைககளை விரித்து,
சிலுவையில் அறையப்பட்டவரின்
வடிவில்
என்றும் அமர்ந்திருக்கும்
சட்டையில்லா சிறுவன்,
அவன் முன் சிதறிக் கிடக்கும்
நாணயங்கள்.
மக்கள் கூட்டம் தாண்டி
வாகனங்கள் மறித்து
சாலையை கடந்து
ஓடி
சரியான நேரத்தில் அப்பாடா
என்று
அலுவலக பளிங்குப் படிக்கட்டில்
கால் பதிக்கையில்,
இன்றைக்கு
இது போதும் என்ற
ஆயாசமாக
இருக்கிறது.....
-பிரபு([email protected])