மன மரம்
ஆயிரம் முறை
சொல்லிவிட்டேன் உனக்கு..
அணுஅணுவாய் என் உள்ளில்
துளைத்து, ஈரம் உறிஞ்சிப் பின்,
நான் வறண்டவென, வாடிய இலை உதிர்த்து
ஊராரிடம் பச்சாதாபம் பெற
நீ செய்யும் இக் கிளையாட்டுப் புலம்பல்களை
இன்றோடு நிறுத்தென..
மூட மரமே,
அன்று உதிர்த்துப்போன புன்னகை
அவளிடமே சென்றுவிட்டதாகக் காலக்காற்று
அறிவித்தபின்னும்...
யாரை எதிர்நோக்கி இக் கான்க்ரீட் மேடையில்
மலர்கள் உதிர்த்து வரவேற்கிறாய்?
உன் இலைகள்
வருங்காலங்களில், நிழல்தருமென
எதிர்நோக்கியிருக்கையில்,
இக்கொடூர வெட்டுப்புழுக்களின் எச்சிலில்
சுருண்டு வளைந்து கூடாக...
புழுக்கள், ஏக்கங்களில் வெறுமையாய்
விரியும் தளிர்களையும் உண்டு,
துளையிட்ட இலைகளில்,
பீடித்த நோயைக்காட்டியும்,
பேதை மரமே!
புழுக்களின் தாயாம் இவ்வண்னத்துப்பூச்சியை
வரவேற்று, பூக்களில் நிறம் பாய்ச்சுகிறாய்..இன்றும்...
வளைந்து நெளிந்து கூன் ஏறிய
அந்த நினைவுக்கிளையைமட்டும்
எப்படியாவது ஒடித்துவிடு..
ஏதோ காற்று அடித்ததாக,
ஊருக்குச் சமாதானம் சொன்னவாறு.
என் தனிமைகளில் ஊர்ந்து
உயிரையே உறிஞ்சும் உன் வேர்களின்
கொடூரங்கள் போதும்..
அந்த நினைவுக்கிளையினின்று
என் நிலம் நோக்கி நீளும்
இவ் விழுதுகளையேனும் ஏதேனும்
அயல் நிலங்களில் கொண்டுபோய்விடு
எப்படியாவது..












Click it and Unblock the Notifications