Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கருணைத் தாய்- நெல்லை சுதன்

Subscribe to Oneindia Tamil

( அருளாளர் பட்டம் அறிவிக்கப்பட்ட இத்தருணத்தில்அன்பு தெய்வம் அன்னை தெரசாவிற்கு எனது இதய அஞ்சலி )

கருணை பொழிந்த மேகமின்று
கலைந்து சென்றதம்மா
கருத்தில் ஒளிர்ந்த தீபமொன்று
கண் மறைந்ததம்மா
காலம் கடமையைச் செய்திடினும்- - என்
கண்ணீர் சமாதானம் அடைவதில்லை
இயற்கை உனை வென்றிடினும்- - என்
இதயம் உனை இழப்பதில்லை

வாக்குறுதிகளை வாரியிறைத்து
வாக்குச் சீட்டுக்களைப்
பெறுதற்கு மட்டுமே
ஐந்தாண்டுகளுக் கொருமுறை
ஏழ்மையும் ஏழைகளும்
எங்கள் அரசியல்வாதிகளின்
நாவினிலே நர்த்தனமாடுகிறபோது
ஐரோப்பாவின் அல்பேனியாவில்
அவதரித்த உன்னை
இந்தியாவின் ஏழைக் குழந்தைகள்
ஈர்த்ததெப்படி? தாயே !

சாதி மதம் மொழியென்று
இரத்த இரணங்கள் மட்டுமே
சரித்திரச் சான்றுகளாய்
சார்ந்த பூமியில்
அன்புவிழி அன்புவழி
அன்புமொழி அன்புமதம்
அத்தனையும் அன்புமயம் !

வார்த்தையில் மட்டுமின்றி
வாழ்ந்தும் காட்டிய
வாழ்வின் அர்த்தமே, அவதாரமே
வணங்குகிறேன் அம்மா -- உன்
ஆன்மாவிற்கு என்றென்றும்
அடிமை நானம்மா !

மதங்களும் மார்க்கங்களும்
மலர்ந்தது ஒன்றுதானே
மனித நேயமெனும் மலர்கள்தானே
மலர்களைச் சிதைத்து நின்று
மரங்களைப் பாதுகாக்க
மண்ணின் மைந்தரிடை
மடமையின் மல்யுத்தம்

பிறிதொரு மண்ணில் பிறந்தாலும். . . .
புவியும் புவிவாழ் மாந்தர்களும்
ஒன்றுதானே !
புரிய வைத்தாய்
புவியியல் ஆராய்ச்சியால் அல்ல -- உன்
புண்ணியச் சேவையால்

ஐயிரண்டு திங்கள்
அடிவயிற்றில் சுமந்த
பெற்றவளும் பிள்ளையுமே
பிரிந்தொழுகும் வாய்ப்புண்டு
பேதைமையால்
திரை நடுவே விழுவதுண்டு

ஆனால்
அன்னையே என்று
உன்னை அழைத்த போதுதான்
என் அங்கத்தின் உயிரணுக்களெல்லாம்
இன்ப பிரளயத்தில்
ஏகோபித்துப் பாடின !
நாடி நாளங்களெல்லாம்
களிநடம் புரிந்தன !

இன்றோ. . .
கருணைத் தாயே !
உன் காலடியில்
என் கண்ணீர்ப் பூக்கள்

சென்ற இடமெல்லாம்
சிறப்பு உனக்குண்டு
பட்டம் பாராட்டுக்கள்
பெற்று மகிழ்ந்ததெலாம் எனக்கன்று !
ஏழை இனத்திற்கென்று - நீ
பகர்ந்ததெலாம் பகிர்ந்ததெலாம்
நாடறியும் இந்நானிலமறியும்

மெழுகுவர்த்திக்கு
ஏன் மேலாடை ?
எதிர்பார்த்து வந்ததல்ல
உன் பாதை !
உளம் இரங்கிச் செய்ததன்றோ
உன் சேவை !

புண்களும் புழுக்களும்
உழுது கொண்டிருந்த
உயிர்க் கூட்டினை - உன்
பூக்கரங்களில் ஏந்தி
அன்பெனும் புனுகு தடவி
அகம் மகிழ்ந்தாயே
அதற்கே
ஆயிரம் கோடிபெறும்
அம்மா !
ஆயிரம் கோடிபெறும் !

மோட்ச வாசலிலே - உனக்கு
சிவப்புக் கம்பள வரவேற்பாம்
சின்னக் குழந்தைகளும்
கண்ணீரோடு கலந்துரையாடினர்
உன் அன்பையே
சுவாசித்த எமக்கு-உன்
மூச்சு நின்று போனதால்
சுவாசம் தடைபடுகிறது தாயே !

இறுதியாக
உன்னிடம் ஓர் யாசகம். . . .

இன்னும் ஓர் தெரசா
எங்களுக்கு வேண்டும்
ஆம் !
அன்னை என்ற சொல்லுக்கு
அர்த்தம் கற்பித்த - அந்த
இன்னும் ஓர் தெரசா
எங்களுக்கு வேண்டும்

மனிதனும் தெய்வமாகலாம்
மார்க்கம் சரியென்றால் !
மனங்களை வென்ற மாதாவே
என் கண்களுக்குத் தெரிந்த
கடவுள் நீ !

எனவே
என் இதயக் கருவூலத்தில்
என்றென்றும் நீ !

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+