கிழக்கு திசை- நெல்லை சுதன்
தென்தமிழ் நாட்டின் கிழக்குக் காணி
மீன்வளப் பாட்டின் பாய்மரம், தோணி
கடலலை கானம் காதில் ஒலிக்க- யான்
கருவறை தெறித்த கடற்கரை பூமி!
பிறந்து, தவழ்ந்து, எழுந்து, நடந்தது
சிறந்து திகழ்ந்த பாண்டியர் பூமி
வீர பாண்டியர் காலடி பதிந்த
வீரயம் பதிஎன் தாய்மடி சாமி!
காலை யெழுந்ததும் கடவுள் நீயென
கிழக்குத் திசையில் இருகரம் கூப்பும்
மாலை மயங்கவும் மனதில் நிறைவென
கிழக்குத் திசையின் மகத்தும் போற்றும்!
கிழக்கு கிழக்கென கிளர்ந்தெழும் உள்ளம்
கணக்குப் பலவென பகர்ந்திங்கு சொல்லும்
கடல்மடிப் பிறக்கும் கதிரவன் உதயம்- நான்
கருத்தாய் வணங்கும் கிழக்கு ஆலயம்!
பிறந்த மண்ணின் பாது காவலராம்
தூய தோமையார் ஆலயம் கிழக்கு
திருச்சீர் அலைவா யருந்தமிழ் கடவுள்
செந்தூர் முருகன் என்தென் கிழக்கு!
ஓயாது ஓதிடும் பள்ளி வாசல்மிகு
காயல் நகரெனக்கு நல்வட கிழக்கு
என்னிரு கரங்கள் என்றும் வணங்கிய
கிழக்கு திசையில் வந்ததோர் வழக்கு!
திருச்சீர் அலையென்றன் திருமுழுக்கு- இன்று
பெருமசீ ரழிவுதந்த துயர் இழுக்கு
தாய்ச்சீர் தந்து உச்சி முகர்ந்தவளே- எம்
தமிழ்ச்சீர் கண்டதே(இ) னிந்த தலைமுழுக்கு!
ஆரோகணம் அவரோகணம் பாடிய அலைகடலே
அபஸ்வரம் பாடியதன் அர்த்தம் என்ன?
அகவற்பா பாடி வெம்மை தணித்தவளே
அல்லற்பா பாடியெம்மைத் தண்டித்ததேன்?
சோகம் உனக்கு சுவைக்கு மென்றால்
முகாரி மட்டுமே முழுமைக்கும் போதாதா?
சொல்லொண்ணா சோகராகம் கண்டு நீயும்
சுனாமி என்றதோர் பெயரிட்டு மகிழ்வதா?
கையில் வலையும் அலையில் பயணமும்
வெய்யில் மழையின் வேதனை தாங்கிடும்
சோதனை வாழ்வுக்கும் காலனாய் வந்ததாலே
சொப்பனத்திலும் உன்திசை நான் வணங்கேன்!
தண்ணீர்த் தலைவியே உனக்கும் தாகமா?
தலைமுறைத் தமிழர் தளிர்இளம் உயிரும்
தமிழ்ப்பால் தந்த தாய்க்குலப் பயிரும் - உன்
தரைவழித் தாக்குதலின் தணியாத தாகமா?
இயற்கை விதியால் சதிசெய்த திசையே
இதிகாசப் போரில் என்னீழத் தமிழன்
இனிய வெற்றி ஓர்நாள் காண்பான் - அன்று
என்னிரு கரங்கள் உன்திசை வணங்கும்!
- நெல்லை சுதன்([email protected])
இவரது முந்தைய படைப்பு:
1. முதல் வீடு
2. இதுதான். . .?
3. கருணைத் தாய்
4. ஞானமோ ! நாணமோ!
5. பருவமே. . .!
6. தமிழன்
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.












Click it and Unblock the Notifications