தமிழன் - நெல்லை சுதன்
தாய்மண் மீது கொண்ட பசியிலும்
தாய்மொழி ருசிக்கப் பேசும் பொலிவாம்
வேறின(உ) முண்டோ பாரினில் மொழிய
வேங்கை யாம்ஈழ மாந்தரைத் தவிர!
பொதிகையில் பிறந்தது பிள்ளைத்தமிழ்- ஈழர்
நாவில் இனித்தது வெல்லத் தமிழ்!
படுகையில் படரும் பசுங்கொடி போல் - அவர்
பண்புல மெங்கும் பசுமைத் தமிழ்!
அந்நிய மண்ணில் அகதியாய் நின்றும்
அழகு தமிழேயவர் பழகு தமிழ்!
திண்ணிய மாந்தர் இவர்தேச மெங்கும்
தென்றிசை மொழியாம் நம் தேன்தமிழ்!
சொந்தமும் சூழலும் சூறாவளி யாயினும்
சொக்கத்தமிழ் மட்டும் சொத்துரிமை கொண்டவன்!
பந்தமும் பாசமும் பாதியாய் மாறினும்
பக்கபலம் என்றன் தொட்டில்மொழி யென்றவன்!
ஆன்மீகம் பொய்க்கலாம் அரசியலும் பொய்க்கலாம்;
வான்கணிதம் பொய்க்கலாம் வரு(ம்)மழையும் பொய்க்கலாம்;
தேன்சுவையும் பொய்க்கலாம் தெள்ளமுதும் பொய்க்கலாம்;
தென்னன் தமிழ்ஈழச் சொல்லழகு பொய்க்குமோ?
இந்தியத் தமிழர் நம்ஈழத்துச் சோதரனை
இலங்கைத் தமிழனென்று இனங்காட்டி நிற்கையிலே
தாயகத் தமிழன்என் தொப்புள்கொடி உறவென்று
இரத்தத்தால் தத்துவமும் எழுதியவன் ஈழனன்றோ!
தாயைப் பேணி பெருமை சேர்ப்பவனே
தனயன் என்றதோர் தகைமை பெறுதற்போல்
தமிழை நாளும்போற்றி பொழுதும் மகிழ்பவனே
தமிழன் என்றதோர் மணிமகுடம் அணிகின்றான்!
- நெல்லை சுதன்([email protected])
இவரது முந்தைய படைப்பு:
1. முதல் வீடு
2. இதுதான். . .?
3. கருணைத் தாய்
4. ஞானமோ ! நாணமோ!
5. பருவமே. . .!
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.