பூக்குட்டிகள்!
பெண் குழந்தைகள்... பூக்குட்டிகள்..
வாழ்வில் நாம் காணும் உயிரோவியங்கள்...
வீட்டுக்குள் வளைய வரும் பெண்தெய்வம்...
அவள் இருந்தாலே வீடு நிறைவு பெறும்!

எந்நாளும் பெண்குழந்தை அப்பா செல்லமாம்!
ஆயின், பரிவினில் கேட்டுப் பாருங்கள் - அவள்
தாயின் உற்ற தோழியும் ஆகிறாள் - வயது வந்தபின்!
பெண் பிள்ளையில்லா தாயிடம் கேட்டுப் பாருங்கள்...
அவள் இல்லாது தாய் எவ்வாறெல்லாம் தவிக்கிறாள் என்று!
தந்தையிடம் கேட்டுப் பாருங்கள் - பூமுகம் இல்லாத
வெற்று வீடாய் உணர்வதை கதையாய் சொல்வார்!
வீட்டை, நிறைக்கிறாள் ஒரு மகளே.....
சிரிப்பினாலும், கிள்ளை பேச்சுக்களாலும்...
அந்த அழகிய மலர் மொட்டுக்களை
மெதுவாய் இதழ் விரித்து
வாசம் பரப்ப விடுங்கள், ஆண் சமூகமே!
அவளை ஒரு பூச்செண்டில் இடம் கொள்ள விடுங்கள்..
நல்லதோர் துணையிடம் சென்று நல்வாசம் பரப்பட்டும்!
அம்மொட்டினை கயமை எண்ணத்தில் பறித்து
இதழ்களைப் பிய்த்தெறிந்து அதில் சுகம் காணும் கயவர்தனை
கடுமையாய் தண்டிக்கும் சட்டங்கள்
உலகெங்கும் இயற்றிடுதல் வேண்டும் - இந்நாளில்
அம்மொட்டுக்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யவே!
கண்கள் கண்ணீர் கொள்ளுது - பச்சிளம் பெண் குழந்தைகளை
குறி வைத்தே நடக்கும் கொடூர நிகழ்வுகள்...
பெண் குழந்தை பெற்றதை எண்ணி மகிழ்வுறும் வேளையில்
அவள் பாதுகாப்பை எண்ணி அஞ்சிடவே செய்யுது பெற்றோர் மனம்!
- ஆகர்ஷிணி என்கிற சுபாஷிணி ஜெயராமன்












Click it and Unblock the Notifications