For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

1. சொல் அறியா மலர்

By Staff
Google Oneindia Tamil News

கலாச்சார மாத இதழ் - பிப்ரவரி 2005

புனிதாவைப் பார்த்தாயா
என
பால்யனிடம் வினவினேன்
ஞாபகத்தின் மடிந்த பக்கங்கள்
கசியும் வாசனையால்
நீட்சி அடைய
சேர்ந்தே வருகிறது
பூக்களின் சுகந்தமும்
புனிதாவின் நினைவுகளும்
பனியில் பதுங்கும் சூரியன்
இவள் விரல்பட்டு விரியும்
மார்கழி முற்றங்கள்
வர்ணத்தின் துகள்களாய்
கைகளின் மாயத்தில்
முகம் பூசிக் கொள்ளும்
தூக்கக் கலக்கத்தில்
திறக்கும் விடியலில்
மலரின் வனத்தினுள்
இவளின் சுவடுகளே முதலில் பதியும்
ஒற்றைப் பூவுக்கே
கையறு நிலையில்
யாவரும் விழித்திருக்க
பரிச்சயமானவற்றை பரிசாக பகிர்ந்தளித்து
அதிசய அரும்புகளுடன்
வெளிப்படுவாள் வனத்தின் விளிம்புகளில்
ஊரையே
ஒற்றைப் பூவாக சுருட்ட
வாசனையின் வசீகரம்
நாசிகளில் ஒட்டிக் கொள்ளும்
ஏழ்நிற இதழ்கள் விரிந்த
சொல் அறியா மலரொன்று
இவள் வீட்டு முற்றத்தில்
வர்ணக் கோலங்களில் கொலு அமர
குழந்தைகளின் ஏக்கங்கள்
பூக்களில் படியும்
நிறங்களை அரசாளும்
அரும்பும் விருட்சம்
அறிய முடியா ரகசியமாய்
வனத்தினுள்
எங்கோ கிளைத்திருக்க
புனிதா எங்கே
என்ற
பால்யனிடம்
பறித்த மலரொன்று
நிறங்களை உதிர்த்துவிட்ட
ஒருநாளின் பின்
யாரும் பார்த்ததில்லை என விளம்ப
மலர் வனத்தினுள்
வாசனை விசித்த காற்றில்
பூவுக்கு இரஞ்சும்
குழந்தைகளின் அரூபஒலி
அங்கோர் புதிர்பாதையில்
கிளை தெரியா விருட்சத்தில்
பூக்காத மலரொன்றில்
மறைகிறாள்
பூக்களின் அரசியாக

2. கூந்தலின் வரிகளில்

சுழற்றி வீசுகிறாள்
நெடிய இரவினை
விரி கூந்தலின்
ஒரு பூவென
கலந்த கனவுகளும்
கலையாத இருளும்
கூந்தலின் வரிகளாகி
சூரியனை சுற்றி இழுக்க
ஒளி திசை நோக்கி
ஆங்காரமாய் எழுகிறது
மென்கூந்தலில்
உதிரும் மலரில் மறைகிறது
மோனத்தின் நிலவு
யார் யாரோ
உதிர்வுகொள்ள
சிக்கலெடுக்கும் அதன் சிகையில்
சூன்யமாய் நீள்கிறது
பகல்
இருளின் ஊற்றுக்
கண்தேடி
சுருளும் குழலில்
கட்டுகிறாள் இரவையும்
மாயத்தில்
நட்சத்திரங்களையும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X